Saturday, May 9, 2009

ஓசியில் ஏசி காத்து வேணுமா?

கத்திரிவெயில் பல் இளிக்கத் தொடங்கி விட்டது. ஆபிஸில் 8 மணி நேரம் ஏசியில் (பல ஆபிஸ்களில் ரெசிஷன் காரணமாக ஏசி பெட்டிகள் வெறும் தூசிப் பெட்டிகளே...) நேரத்தைப் போக்கினாலும் சனி,ஞாயிறுகளில் என்ன செய்வீர்கள்? வீட்டில் ஏசி வைத்து குதூகலிக்கும் அளவுக்கு பட்ஜெட்டில் இடமில்லாதவர்கள் அனைவரும், இனி ஓசியில் ஏசியை அனுபவிக்க சூப்பர் டிப்ஸ் (இந்தப் பதிவுக்காக களப்பணி ஆற்றி கருவாடானது தான் மிச்சம் ):

1. வெயில் ஆரம்பிக்கும் நேரம் வண்டியை கிளப்புங்கள் அல்லது பஸ்/ரயிலைப் பிடித்து நேராக சரவணா நகர் (தி நகர் தான்!) வந்து சேருங்கள். பனகல் பார்க்கில் எங்காவது ஓரமாக வண்டியை நிறுத்தி விடுங்கள். அங்கிருந்து உங்கள் ஏசி பயணம் துவங்கட்டும். பனகல் பார்க்கிலிருந்து நேராக புதிய சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் செல்லுங்கள். வாசல் வரை சென்று அப்படியே ஹால்ட் அடித்து மேற்கு திசை பார்த்து நின்று விடுங்கள். கையில் கடலை/வறுத்த பொறி என ஏதாவது ஒன்று. காரணம்: மனைவி சகிதம் குடும்பத்தை ஜவுளி எடுக்க கடைக்குள் அனுப்பும் செவ்வாய் புண் சிரிப்புக்காரர்கள் (இளிச்சவாயர்கள்) இப்படித்தான் நிற்பர்.

சரியாக 11 மணியளவில் கடையின் ஏசி பொட்டிகள் அனைத்தும் வேகப்படுத்தப்படும். கடையின் வாசல் மூடப்படாததால் ஏசி காற்று அப்படியே வாசலைத் தாண்டி சாலையில் வழியும். வாசலில் ஏர் கட்டர் எனும் காமெடி பீஸை பொருத்தியிருப்பார்கள். அசுர ஏசி காற்றை அது தடுத்து நிறுத்த முயன்று தோற்றுப் போன பின் வாசலைத் தாண்டி சாலையில் நின்றிருக்கும் உங்கள் மீது ஏசி காற்று வருடிக் கொடுக்க ஆரம்பிக்கும் தருணம் இருக்கிறதே... அதை அனுபவிக்க வேண்டும் மக்கா!


ஒரே இடத்தில் நின்றிருந்தால் சந்தேகம் வந்துவிடும் கடை செக்யூரிட்டிக்கு. அதனால்... உங்களை வெளியில் காக்க வைத்து விட்டு உள்ளே குடும்பம் கும்மி அடிப்பது போலவும், நீங்கள் டென்ஷனின் உச்சியில் நின்று டான்ஸ் ஆடுவது போலவும் படம் காட்ட வேண்டும். 1 மணி நேரம் இப்படியே கட்டையைக் கொடுத்து விட்டு போத்தீஸ், சென்னை சில்க்ஸ், நல்லி என ஜகா வாங்கிக் கொண்டே தி நகர் பஸ் ஸ்டாண்ட் வரை நகரலாம்.

2. ரோட்டில் நின்று ஏசி காத்து வாங்குவது பிடிக்கவில்லை என்றால், நேராக சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே என்ட்ரி கொடுங்கள். ஏழு மாடி (சரி தானே?) ஏறி இறங்கி, ஒவ்வொரு தளத்திலும் துணி வகையறாக்களை முகர்ந்து, கை துடைத்து, பிடித்து இழுத்து கிழித்து... என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கடை வேலையாட்கள் 100 பேர் இருந்தாலும், ’என்ன சார் வேணும்’னு ஒருத்தரும் வரமாட்டாங்க....சொந்த ஊர்க் கதைகளில் அவர்கள் பிஸி! பொருள் எதுவும் வாங்கவில்லை என்றாலும் கேட்க யாருமில்லை.
ஆனால் தெரியாத்தனமாக சண்முகா ஸ்டோர்ஸ், சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளே ஏசி காத்து வாங்கப் போய் விடாதீர்கள்...வாக்குப் பதிவு முடிந்த ஓட்டுச் சாவடி போல இருக்கும். ஓணர், மேனேஜர், வேலையாட்கள் தவிர கஸ்டமர் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். நீங்கள் நடந்து உள்ளே செல்லும் போது, பேஷன் ஷோவில் அன்ன நடை போடும் அழகிகளைப் பார்ப்பது போல அனைத்து சிப்பந்திகளும் கண்களால் சிலந்தி வலை பின்னுவர்..

2. ஓசி ஏசிக்கான அடுத்த ஸ்பாட் கொஞ்சம் ஹை-டெக்கானது. அது தான் ஸ்பென்சர்ஸ் பிளாசா. வண்டியில் செல்பவர்களை பார்க்கிங் நெருக்கடியால் கொஞ்சம் எரிச்சலடையச் செய்யும். பஸ்ஸில் போவோர்க்கு அது சொர்க்கம். உள்ளே நுழைந்தால் உங்களை கேட்க யாருமில்லை. பாட்ஷா மாதிரி எஸ்கலேட்டரில் ஸ்டாலாக ஏறலாம், லிப்டில் இறங்கலாம், மியூசிக் வேர்ல்டு கடைக்குச் சென்று ஹெட்செட்டில் இதமான பாடல்களைக் கேட்கலாம். கையில் 5 ரூபாய் இருந்தால் முதல் தளத்தில் உள்ள டீசன்டான டீ கடையில் (டீ கடை இருக்கு) சூடாக ஒரு டீ குடித்து விட்டு தெம்பாக சுற்றலாம். நேரம் போவது தெரியாது.

3. அடுத்த ஹைடெக் இடம், சிட்டி சென்டர் (ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்). வண்டி வைத்திருந்தால் சாரி! ஒரு மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய். அதற்கு மேலே போனால் கட்டணம் எகிறும். தியாகராஜா, சைதை ராஜ், கோபிகிருஷ்ணா தியேட்டர்களில் பால்கனி டிக்கெட் கட்டணம் தான், ஐநாக்ஸில் பார்க்கிங் கட்டணம்... அதனால் கொஞ்சம் உஷார். உள்ளே தவிச்ச வாய்க்கு ஒரு வாய் தண்ணி தர மாட்டாய்ங்க..பாத்துக்கங்க!
அடுத்த பதிவில் வியர்வை நாற்றம் வெளியில் தெரியாமல் இருக்க உயர் தர சென்ட், பர்ஃபியூம், பாடி ஸ்பிரேக்களை ஓசியில் அடித்துக்கொண்டு திரிவது பற்றி காணலாம் (ஓட்டுக்களை அள்ளிக்கொடுத்து ஆதரித்தால்...).






பிடித்திருந்தால் தமிழிஷ், தமிழ் மணத்தில் ஒரு ஓட்டைக் குத்தி விட்டுச் செல்லுங்கள்