Saturday, November 14, 2009

கடத்தல்!

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திபள்ளி செக்போஸ்ட். இரு மாநிலங்களையும் பாரபட்சமின்றி ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது மழை. மாரத்தான் ரேஸ் ஆடும் மழைக்கு இதமாக டீ குடித்துக் கொண்டிருந்தார் இமானுல்லா. 10 ஆண்டுகளாக இந்த செக்போஸ்ட்டில் தான் வேலை. வரும், போகும் வண்டிகளில் கடத்தல் பொருட்கள் இருப்பதை டிரைவர்களின் கண்களை வைத்தே கண்டுபிடிக்கும் நேர்மையான கில்லாடி போலீஸ்காரர். தீவிரவாத நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததால், இமானுல்லாவுக்கு அன்று டபுள் டியூட்டி.

உக்காந்த எடத்துலயே உலகம் பூரா ஹைடெக் பொருளாதார தீவிரவாத்தை அழகா பண்றான் அமெரிக்காகாரன். அந்த மாதிரி எதாவது பண்ணி தொலையக்கூடாதா இந்த தீவிரவாதிங்க.. இப்படி அவனுங்களும் ஓடி ஒளிஞ்சி, நம்மளையும் நிம்மதியா விடமாட்றானுங்க" புலம்பலை முனகலாக்கிக் கொண்டிருந்தார் இமானுல்லா.

தூரத்தில் மிக வேகமாக ஒரு பைக். லெதர் கோட், ஹெல்மெட் போட்டு முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு வருகிறான் ஒருவன். அவனை மடக்கினார். "சொல்லுங்க சார், எதுக்கு நிறுத்துனீங்க?"

"ம்ம்..உனக்கு மாலை போட்டு மரியாதை பண்ணத்தான். இறங்குய்யா வண்டிய விட்டு. சைடுல என்னய்யா அது?"

"மணல் பை சார். பாக்ஸிங் பிராக்டிஸ் பண்ண கொண்டு போறேன்"

"மணல் பை மாதிரி தெரியலயே.. அத பிரிச்சி கொட்டு"

"இல்ல சார்..அது வந்து..."

"இப்ப நீ பிரிக்கல...உன்ன நான் பிரிச்சிருவேன்"

பை முழுவதும் வெறும் மணல், வெறொன்றுமில்லை. ஆனால் அந்தப் பையில் ஏதோ ஒன்று கடத்தப்படுவதாக அவரது போலீஸ் மூளை சைரன் அடித்தது. ஆனாலும் அவருக்குத் தெரிந்த நுட்பங்களைக் கொண்டு சோதித்தார். முடியவில்லை. அரை மனதாக அவனை அனுப்பினார்.
ஒரு வாரம் கழிந்தது. அதே ஆள். ஆனால் இம்முறை பைக்கில் நான்கு பைகளைக் கட்டியிருந்தான். நான்கும் பெரிய, வித்தியாசமான வடிவத்தில் அழகாக இருந்தன.

"நிறுத்து, நிறுத்து.. போன வாரம் வந்தவன் தானே நீ...இந்த முறை என்ன கொண்டு போற? எல்லாத்தையும் பிரி"

இம்முறை மிகுந்த தயக்கத்துடன் பிரித்தான். பெரிய பைகள் முழுவதும் மிகச் சிறிய கூழாங்கற்கள், அதனுடன் சிறிய தர்மாக்கோல் பந்துகள். அவற்றை அக்குவேறு ஆணி வேறாக சோதித்து விட்டார் இமானுல்லா. கூட இருந்த இரண்டு போலீஸ்காரர்களும் சோதனையில் களைத்து விட்டனர்.

வெற்றிக் களிப்புடன் அத்தனை மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். ஆனாலும் அந்த மூட்டையில் என்னமோ இருப்பதாக இமானுல்லாவின் உள்மனது அலறியது.
"சே.. இத்தனை வருஷம் போலீஸா இருந்ததுக்கே வெக்கப்படுறேன். அவன் அந்தப் மூட்டைக்குள்ள என்னமோ கடத்துறான். ஆனா கண்டுபுடிக்க முடியல. விஞ்ஞானம் கடத்தலுக்கு நல்லாவே உதவுது" என வெளிப்படையாக புலம்பினார்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 8 முறை அவன் அந்த செக்போஸ்ட்டை அழகாக கடந்தான், பைக்கில் வித விதமான மணல், தெர்மாகோல், மரத்தூள் மூட்டைகளுடன். இமானுல்லாவும் சளைக்காமல் அவனை சோதனை செய்தார். ஒன்றும் நடக்கவில்லை.

மிகப் பெரிய ஏமாற்றத்துடன் பணி ஓய்வு பெற்றார் இமானுல்லா. எல்லைப் புற கிராமத்தில் உள்ள வீட்டில் பொழுதைக் கழித்த அவர், ஒருநாள் நெடுஞ்சாலையில் உள்ள கணேசன் டீ கடையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

"ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா...!" கணீரென ஒலித்த குரலைக் கேட்டு பேப்பரிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்த்தார் இமானுல்லா.

அதே முகம்...அதே குரல்...அவனே தான்!

"யோவ்... என்னய்யா இந்த பக்கம். எங்க கடத்தல் மூட்டைகளைக் காணோம்"

"வணக்கம் சார். ரிட்டயர்டு ஆயிட்டீங்களா...பரவால்ல, என்ன ஞாபகம் வச்சிருக்கீங்க!

இப்பல்லாம் யாரும் உங்கள மாதிரி நேர்மையா சோதனை பண்றதில்லை சார். காசு வாங்கிட்டு விட்டுர்றாங்க"

"எனக்கே தண்ணி காட்டுன கில்லாடிய்யா நீ, மறக்க முடியுமா...சரி, இப்போ எனக்கு ஒரு உண்மையைச் சொல்லு...மணல் மூட்டைங்கற பேர்ல தமிழ்நாட்டுல இருந்து கர்நாடகாவுக்கு என்னத்த கடத்துன? சத்தியமா நா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!"

"வேணாம் விடுங்க சார்!"

"நான் ரிட்டயர்டு ஆயிட்டேன். உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ கடத்துறன்னு நிச்சயமா தெரியும். ப்ளீஸ், இத்தனை வருஷமா என்ன கடத்துன?"

"திருட்டு பைக்!"


எனக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வந்த ஆங்கிலத்தில் ஜோக். கதையாக்கி இருக்கிறேன்.
பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லையென்றாலும் பின்னூட்டமிடுங்கள்!!

Sunday, November 8, 2009

மற்றொரு மூலையில்...அடச்சே!!


போன மாதம் கண்புரைக்கு சிகிச்சை செய்ததால், வெளிச்சத்தைத் தவிர்க்க கறுப்புக் கண்ணாடியுடன் அந்த பூங்காவுக்குச் சென்றார் நடேசன். தினமும் இதே நேரம் வாக்கிங் போனாலும், யாருடனும் இதுவரை பேசியதில்லை.சில நாட்களாக தன் வயதை ஒத்த மூன்று பேரிடம் ஹலோ மட்டும் சொல்வதுண்டு. அவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். நால்வருக்கும் பொதுவான நண்பன் ஹலோ மட்டுமே...

"இன்னைக்காவது அவங்ககிட்ட பேசிடணும்..." என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றார். பூங்காவின் மற்றொரு மூலையில் அந்த மூன்று பேரும் கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். மெதுவாக அவர்களை நோக்கிச் சென்றார்.

பூங்காவின் மற்றொரு மூலையில்...
"இத்தனை நாளா நாம வெறுமனே ஹலோ மட்டும் தான் சொல்லிக்கிட்டிருந்தோம். இன்னைக்குத் தான் பேசறோம். ரொம்ப சந்தோஷம். என் பேரு சுந்தரராஜன். ரிட்டயர்டு கவர்மெண்ட் ஸ்டாப். என் மகன் சாதாரண கார் சேல்ஸ்மெனா இருந்தான். இன்னைக்கு உழைச்சு முன்னேறி பெரிய கார் ஷோரூம் வச்சிருக்கான். தன்னோட பிரெண்டுக்கு ஒரு சான்ட்ரோ கார் பிரசன்ட் பண்ணிருக்கான். நட்புக்கு இலக்கணம் அவன்" என்றார் ஒருவர்.

"என் பெயர் அருளப்பன். என் பையனும் சும்மா இல்ல. கார்பென்டரா இருந்தான். படிப்படியா முன்னேறி இன்னைக்கு பெரியளவுல ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றான். தன்னோட பிரெண்டுக்கு தாம்பரத்துல பிளாட் பிரசன்ட் பண்ணி அசத்திட்டான். என் மகன் தான் நல்ல நட்புக்கு உதாரணம்..." இது இரண்டாமவர்.

"நான் மனோகரன். என் பையன் ஷேர் மார்க்கெட் புலி. சமீபத்துல தன்னோட நண்பனுக்காக லாபத்துல இருக்குற கம்பெனியோட 1 லட்ச ரூபா ஷேர்ஸ் சும்மாவே கொடுத்துருக்கான். நட்புக்காக எதையும் செய்வான் என் மகன்" என்றார் மூன்றாமவர்.

இவர் பேசி முடிக்க, நடேசன் அங்கு வந்து சேர்ந்தார்.

"வாங்க சார். நீங்க கொஞ்சம் லேட். நாங்க மூணு பேரும் அறிமுகமாயிட்டோம். உங்களையும் உங்க குடும்பத்தைப் பத்தியும் சொல்லி அறிமுகப்படுத்திக்கோங்க! அப்புறம் நாங்க எங்கள பத்தி சொல்றோம்"

"வணங்கம்க...என் பேரு நடேசன். எனக்கு பொய் பேச வராது. நான் ரிட்டயர்டு ஸ்கூல் டீச்சர். எனக்கு ஒரே ஒரு மகன். உருப்படியா எந்த வேலையிலும் நிலைக்கறதில்லை. சமீபத்துல தான் அவன் ஒரு ஹோமோன்னு கண்டுபுடிச்சேன். அவனுக்கு 'பாய் பிரெண்ட்ஸ்' அதிகம். அதுல ஒரு கார் கம்பெனிகாரன் சாண்ட்ரோ கார் கொடுத்துருக்கான், ரியல் எஸ்டேட்காரன் தாம்பரத்துல பிளாட் கொடுத்துருக்கான், ஷேர் பிசினஸ் பண்ற ஒருத்தன் 1 லட்ச ரூபா ஷேர்ஸ் அன்பளிப்பா கொடுத்துருக்கான். என்ன கருமத்துக்குத்தான் இவனுங்கள்லாம் இப்படி அலையறானுங்கன்னு தெரியல...சரி உங்களையும், உங்க பசங்கள பத்தியும் சொல்லுங்க!

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...இதெல்லாம் ஒரு கதைன்னு எங்க நேரத்தை கெடுத்தியேன்னு நினைக்கிறவங்க கருத்துரைல திட்டலாம்!

Tuesday, October 27, 2009

காதல்


இரண்டு அழகான பட்டாம்பூச்சிகள் காதலித்தன. ஒருநாள் பூந்தோட்டத்தை வட்டமிட்டு மகிழ்ந்த போது...எப்போதும் பெண் பட்டாம்பூச்சியை சீண்டிப் பார்த்து விளையாடும் ஆண் பட்டாம்பூச்சி, " நமக்குள்ள ஒரு சின்ன விளையாட்டு. இதுல யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போமா?" என்றது.

"உனக்கு எப்பவுமே விளையாட்டு தான். சரி, என்ன விளையாட்டு?"

"நாளை அதிகாலையில் இந்த மொட்டு பூவாக மலர்ந்த உடனே, பூவுக்கு நடுவுல உட்காரணும். யார் முதல்ல இடம் பிடிக்கிறாங்களோ, அவங்களோட காதல் தான் உயர்ந்ததுன்னு அர்த்தம்! என்ன சொல்ற?"

"போட்டியில நான் தான் ஜெயிப்பேன். என்னோட காதல் தான் உயர்ந்தது!"

"ஆண்களோட காதல் தான் உயர்ந்தது. நாளைக்கு நீ அதை பார்க்கப் போற"

அடுத்த நாள் காலை, அந்தப் பூ மலர்வதற்கு முன்பே, ஆண் பட்டாம்பூச்சி அங்கு சென்று விட்டது. பூ மலரும் நேரத்தில் உடனே சென்று உட்காருவதற்குத் தயாராக சிறகுகளை விரித்து காத்திருந்தது. பூ மலரத் தொடங்கும் போது, "இன்னும் அவளைக் காணோமே...சே, இவ்வளவு தானா அவளோட காதல்?" என்ற எரிச்சலோடு பூவை நெருங்கியது.
மொட்டு மெல்ல விரிந்தது. உள்ளே... பெண் பட்டாம்பூச்சி. நள்ளிரவே மொட்டுக்குள் தன்னை வருத்தி புகுந்ததால் கிழிந்த சிறகுகளுடன், இறந்து திறந்த அதன் கண்களில் வலியையும் மீறி காதலையும், காதலனையும் வென்று விட்ட பரவசத்தின் மிச்சம்!!



கதை பிடித்திருந்தால், தமிழிஷ் பட்டையில் ஒரு ஓட்டைப் போடுங்கள்!!

Thursday, September 24, 2009

தோசைக்குள் மனசு!

ஹோட்டலுக்குள் நுழைந்ததும், ஓரமாக ஒரு டேபிளைத் தேடும் கூச்ச சுபாவம் நம் எல்லோரிடமும் உண்டு.. அது அஜயனுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் தான், காலியாக இருந்த பல டேபிள்களை கண்களாலேயே ஓரந்தள்ளி, ஓரத்தில் இருந்த டேபிளை மையம் கொண்டு அதில் அமர்ந்தான்...

"என்ன சார் வேணும்?"
அடுத்த ஷிஃப்டுக்கு வர வேண்டிய ஆள் லீவு போட்டதால் உருவான எரிச்சல், எச்சிலில் நீந்தி வார்த்தைகளாய் வெளியேறியது சப்ளையர் சரவணனுக்கு.

"பன்னீர் மசாலா தோசை எவ்ளோ?"

"35 ரூவா சார்!"

பாக்கெட்டைத் துழாவி, பணத்தை எண்ணினான் அஜயன். பணச் சுருக்கத்தை உணர்த்தியது அவனது புருவச் சுருக்கம்.
"பன்னீர் மசாலா வேணாம். மசாலா தோசை எவ்ளோ?"

'சரியான பரதேசி போலருக்கு. காச எண்ணி வச்சிகிட்டு சாப்புட வர்றான். இவனா டிப்ஸ் தரபோறான்...' என கம்ப்யூட்டரை விட வேகமாக மனதுக்குள் திட்டித் தீர்த்த சரவணன், கடுப்புடன், "30 ரூவா சார்!"

மீண்டும் பாக்கெட்டுக்குள் விரலால் கோலம் போட்ட அஜயன், நிம்மதிப் புன்னகையுடன், "சரி, கொண்டு வாங்க!" என்றான்.

10 நிமிடங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட தோசை, அடுத்த 5 நிமிடங்களில் அஜயனின் செரிமான மண்டலத்துக்குள் அவசரமாக பயணித்தது.

30 ரூபாய் பில்லை வைத்து விட்டு சரவணன் நகர, பாக்கெட்டிலிருந்து பணத்தை வைத்து விட்டு அஜயனும் வேகமாக நகர்ந்தான்.

அஜயனின் வேகத்தைப் பார்த்த சரவணன் "கிழிஞ்ச நோட்டு வச்சிருப்பானா...காசு கம்மியா வச்சிபுட்டு ஓடிட்டானா..." என மீண்டும் தன் கம்ப்யூட்டர் மனதுக்கு வேலை கொடுத்துக் கொண்டே, பில் பணத்தை எடுத்தான். அதில்....

35 ரூபாய் பணம் சரவணனை ஏளனம் செய்து கொண்டிருந்தது!

Thursday, September 17, 2009

தென்கச்சி சுவாமிநாதனின் மறுபக்கம்!

"தெளிப்பானை பூட்டிக் கொளனுடன் இணைத்து, பதம் பார்த்து பூச்சிக் கொல்லி திரவத்தை தெளிக்கவும்"
1988ம் ஆண்டுக்கு முன் வானொலியில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உதவிக்குறிப்பு இது.
"அண்ணாச்சி...அரை லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்த டப்பாவுல ஊத்தி, தெளிப்பானோட இணைச்சிட்டீங்கன்னா, ரொம்ப ஈஸியா தெளிச்சிடலாம். பூச்சி, புழு அண்டாது..." தென்கச்சி சுவாமிநாதன் என்ற பணியாளர் எளிமைப்படுத்தி அளித்த உதவிக் குறிப்பு இது.

பலத்த எதிர்ப்புக்கிடையே, போராடி வழக்குத் தமிழை வானொலிக்குள் புகுத்தி வெற்றி கண்டவர் இன்று நம்மிடையே இல்லை. அவரது இன்று ஒரு தகவலைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் அவர் இல்லத்துக்குச் சென்று நீண்ட நேரம் அளவளாவினேன். மன உளைச்சலில் இருப்பதாகக் கூறினார். இதுவரை ஊடகங்களின் பார்வைக்கு வராத அவரது அனுபவங்களை சிரிக்காமல் சொல்லி என்னை குலுங்கிச் சிரிக்க வைத்தார். அவர் கூற நான் குறித்துக் கொண்ட அவரது அனுபவங்கள், அவரைப் பற்றிய அரிய குறிப்புகள் இங்கே.. இது அவருக்கு அஞ்சலிப் பதிவு!!

பிடிக்காமல், வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி,"இன்று ஒரு தகவல்". வேறு வழியில்லாமல் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார் தென்கச்சியார். சிலர் சற்று பிரபலமானவுடனே புதுப் பேனா வாங்கி வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் போட ஆள் தேடுவார்கள். ஆனால் தென்கச்சியார் நேரெதிர். பிரபலத்தின் சாயல் சிறிதும் இல்லை அவரிடம்.

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டவற்றில் சில துளிகள்:

"நான் அரசு ஊழியன். இந்த நிகழ்ச்சியை செய்வது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதைத்தான் செய்தென். அதே வேலையை இப்போ டிவியில செய்றேன். அவ்வளவு தான். என்னோட வேலையைச் செய்றதுக்கு என்னை ஏன் புகழ வேண்டும்?"

"நான் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிகள்ல கொடுத்த நகைச்சுவைகளில் 75% திரைப்படங்கள்ல பயன்படுத்திக்கிட்டாங்க. பல இயக்குநர்கள் அனுமதி கேட்டாங்க. பலர் கேட்காமல் பயன்படுத்திக்கிட்டாங்க. குட்டிக் கதையெல்லாம் சொல்ற வரைக்கும் தான் அது என் படைப்பு. சொல்லி முடிச்சிட்டேன்னா, அது என்னோடதில்ல...கேக்கிறவங்களுக்கு சொந்தம்"

ஓய்வு பெறும் வரையிலும், அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. வெளிநாடு வாழ் தமிழர்களின் தொடர் அழைப்புகளை தட்ட முடியாமல், வேறு வழியின்றி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகள் சென்றுள்ளார்.

செய்தியாளராக இருந்த போது, பலமுறை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். பதட்டம் மிகுந்த பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களை பேட்டி எடுத்து, அவர்களது உள்ளக் குமுறல்களை தமிழகத்தில் ஒலிக்கச் செய்திருக்கிறார்.

எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர். மடிப்பாக்கத்தில் அவரது வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் 'தெருவலம்' சென்ற போது, வீட்டை விட்டு வெளியே வந்து 15 நிமிடங்கள் எனக்காகக் காத்திருந்தார். கிளம்பும் போது, "என்னை மார்க்கெட்ல இறக்கி விட்ருங்க தம்பி" என வாஞ்சையோடு கேட்டு வண்டியில் ஏறிக் கொண்டார்.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம்... TVS மொபெட்.

வீட்டின் மாடியில் அறை கட்டி வைத்துள்ளார். வெளியூரிலிருந்து அவரைப் பார்க்க வரும் நேயர்கள், ரசிகர்களை அங்கு தங்க வைத்து உபசரிப்பார்.

ஒரு முறை திருக்குறள் முனுசாமி அவர்கள், சுவாமிநாதனை அழைத்து "எங்கிருந்து தகவல்களை எடுக்குறீங்க? உங்க தகவல்களை என்னோட புத்தகங்களில் பயன்படுத்திக்கலாமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு தென்கச்சியார் "நான் சொல்ற நெறய தகவல்களை உங்க புத்தகத்துல இருந்து தான் எடுக்கறேன்" என்றார்.

இன்ஸ்டன்ட் காபி போல, ஒரு விஷயத்தைச் சொன்னால் சில நிமிடங்களில் அதை கருவாக வைத்து குட்டிக் கதை + ஒரு ஜோக் என கலந்து கட்டி கலக்குவார். 'மது' என்று நான் ஒரு வார்த்தையைச் சொல்லி, உடனே ஒரு 'இன்று ஒரு தகவல்' தயாரிக்க முடியுமா? என்றேன். "அப்பிடியா தம்பி.. ஒரு 5 நிமிஷம் வேற ஏதாவது பேசலாமா..." என்றவர், வேறு ஒரு விஷயத்தைப் பற்றி பேசினார். திடீரென நிறுத்தியவர், "நீங்க சொன்ன வார்த்தைக்கான குட்டிக் கதை தயார். சொல்லட்டுமா?" என்றார்.

தனது ஸ்டைலில் இன்று ஒரு தகவல் சொல்லத் துவங்கினார்.(அவர் ஸ்டைலில் படித்துப் பாருங்கள்).
ஒரு நாள் சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல ரெண்டு பேர் மூக்கு முட்ட குடிச்சுட்டு விழுந்து கிடந்தாங்க. கன்னியாகுமரி போற ரயில் வந்து நின்னுட்டுது. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் மட்டும் கொஞ்சம் கம்மியா குடிச்சிருப்பான் போல. அவன் மட்டும் தட்டுத் தடுமாறி ரயிலேறிட்டான். ரயிலும் புறப்பட்டு போய்ட்டுது.

ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி, ஸ்டேஷன்ல விழுந்து கிடந்தவன் மெல்ல எழுந்து பாத்தான். திடீர்னு அய்யோ, அம்மான்னு கதறி அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுகையை கேட்டு அங்க வந்த ஸ்டேஷன் மாஸ்டர், "ஏம்பா, அழுவுற"ன்னு கேட்டார். அதுக்கு அவன் "சார், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் போய்டுச்சா?" ன்னு கேட்டான். அதுக்கு அவர், "போய்டுச்சேப்பா...நீ குடிச்சதுனால நிதானம் தவறி ரயில தவற விட்டுட்டே..பணமும் விரயம், நேரமும் விரயம். இதோட நாளைக்கு தான் அடுத்த ரயில். உன் கூட வந்தவன் குறைவா குடிச்சதால, தடுமாறி ரயிலேறிட்டான். குடிக்காம இருந்தா, ரெண்டு பேரும் போய்ருக்கலாம்ல. இனிமேலாவது திருந்து" அப்படீன்னார்.

"என்னது, என் கூட இருந்தவன் ரயிலேறி கன்னியாகுமரி போய்ட்டானா?" ன்னு கேட்டுட்டு மறுபடியும் அய்யோ, அம்மான்னு கதறி அழ ஆரம்பிச்சுட்டான். ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரொம்ப சங்கடமாயிட்டுது. "சரி விடுப்பா. இதுக்கு ஏன் அழற"ன்னு ஆறுதல் சொன்னார்.

அதுக்கு அவன் "அவன் என்னை வழியனுப்ப வந்தவன் சார். நான் தான் ஊருக்கு போகணும். அவன் கிட்ட பைசா கூட எதுவும் இல்ல"ன்னான்!

சிரிக்காமல் இதை சொல்லி முடித்தார் தென்கச்சியார்!

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன், இன்று சிரித்த முகமாக மறைந்து அனைவரது முகங்களையும் இறுக வைத்து விட்டார்.

Sunday, July 26, 2009

ஆந்தைக்காக அலையும் சேட்டுகள்..சுடுகாடாய் மாறும் வண்டலூர்


மூட நம்பிக்கை = ஒருவர்/ஒரு குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, சில உயிர்கள் தங்கள் நிம்மதியை இழத்தல்.

வசதி குறைந்தோரின் மூட நம்பிக்கைகள் எலுமிச்சை, கோழி, அதிகபட்சம் ஆடு என்பதோடு முடிந்து விடுகிறது. வசதி படைத்தோரின் மூட நம்பிக்கைகள், எந்த எல்லைக்கும் செல்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், வட மாநிலத்தவர்கள். குறிப்பாக சேட்டுகள் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினர் (மொத்தமாக வட மாநிலத்தவர்களை நாம் ஏன் சேட்டுகள் என்று அழைக்கிறோம்?)
சமீபகாலமாக மிகப் பெரிய மூட நம்பிக்கை ஒன்று சென்னையில் வசிக்கும் வட மாநிலத்து பணக்காரர்களை வாட்டி எடுக்கிறது.தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் பன்மடங்கு பெருக வேண்டுமெனில், ஆந்தைகளின் உடலில் இருந்து முடியைப் பிடுங்கி (இறக்கையில் இருந்து பிடுங்கக் கூடாது. உடலில் இருந்து மட்டுமே பிடுங்கப்பட வேண்டும்), அதை வைத்து பூஜிக்க வேண்டும். ஏழு தலைமுறைக்கும் குறையாத சொத்துக்கள் கிடைக்க வேண்டுமெனில், ஆண் ஆந்தையின் கழுத்தைத் திருகி பூஜைகள் செய்ய வேண்டும்.
ஆடு, கோழிகள் என்றால் எளிதில் கிடைத்து விடும்.. ஆந்தைகள்? ஏற்கனேவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஆந்தைகளுக்கு எங்கே போவது, வனவிலங்கு காப்பங்களைத் தவிர...! பல மாநிலங்களிலும் வன விலங்கு சரணாலயங்களில் ஆந்தைகள் இந்த பூஜைக்காக ‘மோட்சம்’ அடைகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆந்தைகள் தங்கள் உயிரை இவர்களுக்காக தியாகம் செய்துள்ளன. எப்படி? ‘மேற்படி’ வருவாய்க்கு எந்த உத்திரவாதமும் இல்லாத அரசு ஊழியர்களைக் கொண்ட வண்டலூர் மிருகக் காட்சி சாலையில், ஆந்தைகள் புண்ணியத்தில் நல்ல வருவாய். ஒரு முடியைப் பிடுங்கித் தர 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர்.
இப்படியே ‘பிடுங்கிப் பிடுங்கி’ அங்கிருந்த மிகப் பெரிய அரிய வகை ஆந்தை தொடர்ந்து சாப்பிடாமல் செத்தே போனது. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் ஆந்தைகள் உள்ளன. அவை நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில், இருட்டில் வாழும் உயிரினங்கள் என்ற பெயரில் வெளிச்சம் இல்லாத அறைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆந்தைகளின் அழிவு, வெளிச்சத்துக்கு வராமலேயே இருட்டுக்குள் மறைந்து விட்டது.

டெய்ல்பீஸ்: இந்த உண்மையை என்னிடம் ஒப்புக்கொண்டது, வண்டலூர் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு பணியாளர். அவர் என்னிடம் பேசியது:ஆந்தைங்கள வந்து சேட்டுங்கோ அடிக்கடி பாப்பாங்க சார்...முடி கேப்பாங்கோ, தர முடியாதுன்னு சொல்லி வெர்ட்டிடுவேன். ஆனா என்னால தொடர்ந்து அத்தையெல்லாம் காப்பாத்த முடில. பாவம் சார் ஆந்த. அத்த போட்டு கொடுமபட்த்தி கட்சில சாகட்சிடானுங்கோ. அது ஒரு வாயில்லா பிராணி சார். சே. இன்னா மன்சனுங்க சார்..அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு கிளம்பும்போது, ‘ சொத்து வச்சிகிறீங்களா சார்.. அது 100 மடங்கு பெர்சா ஆவணுமா சார்... என்கிட்ட கட்சியா ஒரு ஆந்த முடி இர்க்கு சார். சேட்டு பசங்களுக்கு 5 ஆயிரம். நீ நம்மாளு. 2 குடு சார் போதும். இன்னா சார் சொல்ற...?
இன்னாத்த சொல்றது???

Friday, June 5, 2009

அவன்..அவள்...'அது'

சென்னை புரசைவாக்கம். பகலில் இருந்த ஆர்ப்பாட்டங்கள், சலசலப்புகளின் சுவடுகள் ஏதுமின்றி அமைதியாய்..மணி: இரவு 10.30. டென்னிஸ் மேட்ச் பார்வையாளன் போல அங்குமிங்கும் கழுத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர். எந்தப் பக்கம் பார்த்தாலும் திருவல்லிக்கேணிக்கு பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஊரில் விவசாயம் பொய்த்துப் போனதால் நண்பனின் சிபாரிசோடு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பெரிய ஜவுளிக் கடையில் விற்பனையாளன் வேலை. ஒரு வாரம் தானாகிறது சென்னை வந்து. அழகழகான பெண்கள், மெரினா பீச், மவுன்ட் ரோடு என கனவுகளோடு வந்திறங்கியவனுக்கு, கடை தான் பகல் நேர உலகம் என விதிக்கப்பட்டு விட்டது.

மணி: 10.45.
"பரதேசிப் பய சரவணன் பஸ்ஸு நெறய இருக்குன்னு சொன்னானே...ஒரு ஈ காக்காயக் கூட காணோமே... அய்யய்யோ, ஒரு வார பேட்டா காசு ஐநூற புடுங்கிட்டு போய்ருவாய்ங்களா?" சுதாகரின் மெல்லிய புலம்பலை சில நொடிகள் கவனித்து விட்டு, தனது வேலையைத் தொடர்ந்தார் அருகிலிருக்கும் டீ கடையின் ஓனர்.
மணி: 11.00.
பஸ் வரும் என்ற நம்பிக்கை சுதாகரின் கால் வழியே வழிந்து ஓடி சாலையில் மறைந்தது. "இன்னைக்கு ரோட்டுல தான் படுக்கணுமா...ட்ரிப்ளிகேணிக்கு நடந்து கூட போக முடியாதே..." சுதாகர் புலம்பிக் கொண்டிருக்கும் போது தான், அவள் அங்கு வந்து சேர்ந்தாள். சுதாகரின் கண்களுக்கு சுமாராகத் தெரிந்த அவள், சாலையையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கத் தொடங்கினாள்.

மணி:11.10
சென்னையில் இரவு நேரங்களில் பெண்கள் வலை விரித்து காசு பிடிங்கி விடுவார்கள் என நண்பர்கள் அடித்த எச்சரிக்கை மணி, சுதாகரின் மண்டைக்குள் "ணங்" என ஓசை எழுப்பிய அதே நேரம், 24 ஆண்டுகள் அவனுக்குள் ஓயாமல் இயங்கி வரும் செரிமாண மண்டலத்துக்குள் திடீரென பட்டாம்பூச்சிகள் கூடி கும்மியடிக்கத் தொடங்கின."ஐநூறு ரூவா இருக்கே.. கொஞ்சம் செலவு செஞ்சாத்தான் என்ன....அதிகமா கேட்டாங்கன்னா? பேசித்தான் பாப்போமே...அடேய், ஊரு பேரு தெரியாத எடத்துல எக்கு தப்பா போய் மாட்டிக்க போறடா...." சுதாகருக்குள் சட்டசபை விவாதம் நடந்து கொண்டிருந்தது. இவர்கள் இருவரையும் கவனித்த நாயர், அந்தப் பெண்ணைப் பார்த்து லேசாக புன்னகையைச் சிந்தி, "பார்ட்டி நம்பகமானவன் தான், இங்க தான் எப்பவும் பஸ் ஏறுவான்" என பார்வையால் கிரீன் சிக்னல் கொடுத்தார்.

மணி:11.15
இதற்கு மேல் பஸ் வராது என உறுதி செய்து கொண்ட சுதாகர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "முதல் தடவையா இருந்தா என்ன....போய் கேட்டுத்தான் பாப்போமே. ரேட் படிஞ்சா போகலாம்" என ஒரு வழியாக முடிவெடுத்துத் திரும்பும் போது....சற்று தள்ளி நின்றிருந்த பெண் இப்போது நெருக்கமாய்!
சுதாகர் திக்கித் திணறிக் கேட்பதற்குள்..."நைட்ல இப்போ தான் மொதோ மொதலா தொழிலுக்கு வந்துருக்கேன். அதான் நல்ல பார்ட்டியான்னு நின்னு பார்த்தேன்.. வீடு எங்கே?" அவளே பேச்சைத் தொடங்கினாள்.
"நா..நான் ட்ரிப்ளிகேணி""ஓ..போலாமா?"
"எவ்..எவ்வளவு? என் கிட்ட கம்மியாத் தான் இருக்கு"
"பரவால்ல வாங்க சார், அதிகமா கேக்க மாட்டேன். பெரிய கஸ்டமர் கிட்ட ரேட் அதிகமா வாங்கிக்குவேன்"
"சரி போலாம்.."
பக்கவாட்டில் மாட்டியிருந்த தனது யூனிபார்ம் சட்டையை மாட்டிக் கொண்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாள் அவள். சென்னையில் முதல் முறையாக ஆட்டோவில், அதுவும் பெண் ஓட்டும் ஆட்டோவில் பயணிக்கும் பரவசத்துடன் அவன்!
இருவரையும் சுமந்து கொண்டு சீறிப் பாய்ந்தது அது!!


கதை பிடித்திருந்தால் தமிழிஷ், தமிழ்மணத்தில் ஓட்டைக் குத்திவிட்டுச் செல்லுங்கள்

Saturday, May 9, 2009

ஓசியில் ஏசி காத்து வேணுமா?

கத்திரிவெயில் பல் இளிக்கத் தொடங்கி விட்டது. ஆபிஸில் 8 மணி நேரம் ஏசியில் (பல ஆபிஸ்களில் ரெசிஷன் காரணமாக ஏசி பெட்டிகள் வெறும் தூசிப் பெட்டிகளே...) நேரத்தைப் போக்கினாலும் சனி,ஞாயிறுகளில் என்ன செய்வீர்கள்? வீட்டில் ஏசி வைத்து குதூகலிக்கும் அளவுக்கு பட்ஜெட்டில் இடமில்லாதவர்கள் அனைவரும், இனி ஓசியில் ஏசியை அனுபவிக்க சூப்பர் டிப்ஸ் (இந்தப் பதிவுக்காக களப்பணி ஆற்றி கருவாடானது தான் மிச்சம் ):

1. வெயில் ஆரம்பிக்கும் நேரம் வண்டியை கிளப்புங்கள் அல்லது பஸ்/ரயிலைப் பிடித்து நேராக சரவணா நகர் (தி நகர் தான்!) வந்து சேருங்கள். பனகல் பார்க்கில் எங்காவது ஓரமாக வண்டியை நிறுத்தி விடுங்கள். அங்கிருந்து உங்கள் ஏசி பயணம் துவங்கட்டும். பனகல் பார்க்கிலிருந்து நேராக புதிய சரவணா ஸ்டோர்ஸ் பக்கம் செல்லுங்கள். வாசல் வரை சென்று அப்படியே ஹால்ட் அடித்து மேற்கு திசை பார்த்து நின்று விடுங்கள். கையில் கடலை/வறுத்த பொறி என ஏதாவது ஒன்று. காரணம்: மனைவி சகிதம் குடும்பத்தை ஜவுளி எடுக்க கடைக்குள் அனுப்பும் செவ்வாய் புண் சிரிப்புக்காரர்கள் (இளிச்சவாயர்கள்) இப்படித்தான் நிற்பர்.

சரியாக 11 மணியளவில் கடையின் ஏசி பொட்டிகள் அனைத்தும் வேகப்படுத்தப்படும். கடையின் வாசல் மூடப்படாததால் ஏசி காற்று அப்படியே வாசலைத் தாண்டி சாலையில் வழியும். வாசலில் ஏர் கட்டர் எனும் காமெடி பீஸை பொருத்தியிருப்பார்கள். அசுர ஏசி காற்றை அது தடுத்து நிறுத்த முயன்று தோற்றுப் போன பின் வாசலைத் தாண்டி சாலையில் நின்றிருக்கும் உங்கள் மீது ஏசி காற்று வருடிக் கொடுக்க ஆரம்பிக்கும் தருணம் இருக்கிறதே... அதை அனுபவிக்க வேண்டும் மக்கா!


ஒரே இடத்தில் நின்றிருந்தால் சந்தேகம் வந்துவிடும் கடை செக்யூரிட்டிக்கு. அதனால்... உங்களை வெளியில் காக்க வைத்து விட்டு உள்ளே குடும்பம் கும்மி அடிப்பது போலவும், நீங்கள் டென்ஷனின் உச்சியில் நின்று டான்ஸ் ஆடுவது போலவும் படம் காட்ட வேண்டும். 1 மணி நேரம் இப்படியே கட்டையைக் கொடுத்து விட்டு போத்தீஸ், சென்னை சில்க்ஸ், நல்லி என ஜகா வாங்கிக் கொண்டே தி நகர் பஸ் ஸ்டாண்ட் வரை நகரலாம்.

2. ரோட்டில் நின்று ஏசி காத்து வாங்குவது பிடிக்கவில்லை என்றால், நேராக சரவணா ஸ்டோர்ஸ் உள்ளே என்ட்ரி கொடுங்கள். ஏழு மாடி (சரி தானே?) ஏறி இறங்கி, ஒவ்வொரு தளத்திலும் துணி வகையறாக்களை முகர்ந்து, கை துடைத்து, பிடித்து இழுத்து கிழித்து... என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். கடை வேலையாட்கள் 100 பேர் இருந்தாலும், ’என்ன சார் வேணும்’னு ஒருத்தரும் வரமாட்டாங்க....சொந்த ஊர்க் கதைகளில் அவர்கள் பிஸி! பொருள் எதுவும் வாங்கவில்லை என்றாலும் கேட்க யாருமில்லை.
ஆனால் தெரியாத்தனமாக சண்முகா ஸ்டோர்ஸ், சங்கரபாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளே ஏசி காத்து வாங்கப் போய் விடாதீர்கள்...வாக்குப் பதிவு முடிந்த ஓட்டுச் சாவடி போல இருக்கும். ஓணர், மேனேஜர், வேலையாட்கள் தவிர கஸ்டமர் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். நீங்கள் நடந்து உள்ளே செல்லும் போது, பேஷன் ஷோவில் அன்ன நடை போடும் அழகிகளைப் பார்ப்பது போல அனைத்து சிப்பந்திகளும் கண்களால் சிலந்தி வலை பின்னுவர்..

2. ஓசி ஏசிக்கான அடுத்த ஸ்பாட் கொஞ்சம் ஹை-டெக்கானது. அது தான் ஸ்பென்சர்ஸ் பிளாசா. வண்டியில் செல்பவர்களை பார்க்கிங் நெருக்கடியால் கொஞ்சம் எரிச்சலடையச் செய்யும். பஸ்ஸில் போவோர்க்கு அது சொர்க்கம். உள்ளே நுழைந்தால் உங்களை கேட்க யாருமில்லை. பாட்ஷா மாதிரி எஸ்கலேட்டரில் ஸ்டாலாக ஏறலாம், லிப்டில் இறங்கலாம், மியூசிக் வேர்ல்டு கடைக்குச் சென்று ஹெட்செட்டில் இதமான பாடல்களைக் கேட்கலாம். கையில் 5 ரூபாய் இருந்தால் முதல் தளத்தில் உள்ள டீசன்டான டீ கடையில் (டீ கடை இருக்கு) சூடாக ஒரு டீ குடித்து விட்டு தெம்பாக சுற்றலாம். நேரம் போவது தெரியாது.

3. அடுத்த ஹைடெக் இடம், சிட்டி சென்டர் (ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்). வண்டி வைத்திருந்தால் சாரி! ஒரு மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் 10 ரூபாய். அதற்கு மேலே போனால் கட்டணம் எகிறும். தியாகராஜா, சைதை ராஜ், கோபிகிருஷ்ணா தியேட்டர்களில் பால்கனி டிக்கெட் கட்டணம் தான், ஐநாக்ஸில் பார்க்கிங் கட்டணம்... அதனால் கொஞ்சம் உஷார். உள்ளே தவிச்ச வாய்க்கு ஒரு வாய் தண்ணி தர மாட்டாய்ங்க..பாத்துக்கங்க!
அடுத்த பதிவில் வியர்வை நாற்றம் வெளியில் தெரியாமல் இருக்க உயர் தர சென்ட், பர்ஃபியூம், பாடி ஸ்பிரேக்களை ஓசியில் அடித்துக்கொண்டு திரிவது பற்றி காணலாம் (ஓட்டுக்களை அள்ளிக்கொடுத்து ஆதரித்தால்...).






பிடித்திருந்தால் தமிழிஷ், தமிழ் மணத்தில் ஒரு ஓட்டைக் குத்தி விட்டுச் செல்லுங்கள்

Wednesday, April 1, 2009

மீண்டும் அதே குறுகுறுப்பு, குதூகலம், ஆனந்த அதிர்ச்சி!

சிறு வயதில் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்? விளையாட்டு, குறும்பு, அழுகை, வெடிச் சிரிப்பு, டிவியில் ஒளியும் ஒலியும், கண்மணிப் பூங்கா நிகழ்ச்சிகள், அம்புலிமாமா புத்தகம்... இவற்றுள் நான் அதிகம் சிரித்தது, அதிகம் பயந்தது, அதிகம் சிலாகித்தது அம்புலிமாமா புத்தகத்துடன் தான். வண்ணமும் அல்லாமல், கறுப்பு வெள்ளையுமல்லாமல் ஈஸ்ட்மேன் வண்ணத்தினால் ஆன பக்கங்கள்.. மிகவும் பிடித்த விக்ரமாதித்தன், வேதாளம் கதைகள், தெனாலிராமன், பீர்பால், முனிவர்கள், ராட்ஸசர்கள், ஏழை விவசாயி, செல்வந்தன், பேராசைக்காரன் என எத்தனை கதாபாத்திரங்கள்...சிறுவயதில் இவர்களின் கதைகளூடே பயணிக்கும் போது ஏற்படும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை சமீபத்தில் மீண்டும் உணர்ந்தேன்.. அதே அம்புலிமாமாவால்

கால ஓட்டத்துக்கேற்ப அம்புலிமாமாவும் இணையத்துக்குள் வந்து விட்டது. கதைகளை ஹை-டெக் வடிவில் கொடுத்து ஜெடிக்ஸ் டிவி போல ஆக்கிவிட்டிருப்பார்கள் என்றெண்ணி அந்தத் தளத்திற்குச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அறிவியல், பொது அறிவு, செய்திகள் என பல புதிய பகுதிகளை வைத்திருந்தாலும், பழைய... அதாவது 1947ம் ஆண்டிலிருந்து வெளியான அம்புலிமாமா கதைகளை அப்படியே, அதே படங்களுடன் தெளிவாக ஸ்கேன் செய்து அளித்திருக்கிறார்கள்.

விக்ரமாதித்தன், பீர்பால், தெனாலிராமன் கதைகளும் அப்படியே, அதே வடிவில்,அதே படங்களுடன்!நான் ரசித்தேன்.. நீங்களும் அம்புலிமாமாவின் குட்டி வயது வாசகர் எனில், மாயாஜாலக் கதை பிரியர் எனில்... http://tamil.chandamama.com/




பிடித்திருந்தால்...பயனுள்ள தகவல் எனில்... ஒரு ஓட்டைக் குத்தி விட்டுச் செல்லுங்கள்!

Tuesday, February 24, 2009

ஏ.ஆர். ரஹ்மான் தமிழர் இல்லையாம்; பாலிவுட்காரர்கள் கொக்கரிப்பு!!

Bollywood music director AR Rahman bags 2 Oscars"
- சி.என்.என், 9 எக்ஸ் மற்றும் பிற ஹிந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்.

"The renowned Bollywood Composor AR Rahman wins Oscar"
- ஹிந்தி மற்றும் ஆங்கில பத்திரிகைகள்.
"ஏ.ஆர். ரஹ்மான் சாதித்து விட்டார். இது நம் இந்தியாவுக்கும், பாலிவுட் உலகுக்கும் பெருமை." - சாருக்கான், சல்மான் கான் மற்றும் இதர கான்கள்.

"அவர் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஸ்டைல் அருமையாக இருக்கும். அவர் நம் சொத்து"
-அமிதாப் மற்றும் சில ஹிந்தி இயக்குநர்கள்.

எனக்கு தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுண்டு. அதற்காக அம்மா தாலியைக் கழட்டி காதலிக்கு போட்டு அழகு பார்ப்பது போல, அவரை பாலிவுட் இசையமைப்பாளர் தான் என ஆமோதித்துக்கொண்டு கைதட்டும் பக்குவம் எனக்கில்லை. ரஹ்மான் தமிழன். தமிழகத்துக்கு சொந்தமானவர்.

"மதராஸி வாலா, ஓஹ் ச்சோர் சாலா" (மதராஸிகள் திருட்டு......) என இதுநாள்வரை நம்மை ஏளனம் செய்துவந்த மும்பை, டெல்லியர்கள் இப்போது ரஹ்மானை மட்டும் தூக்கி வைத்து சொந்தம் கொண்டாடக் காரணம்? இந்தியாவுக்கு கிடைத்த ஆஸ்கர், பாலிவுட்டுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். உலகம் பாலிவுட்டை போற்ற வேண்டும். இதை வைத்து ரஹ்மானை மிகப் பெரிய தொகைக்கு 'குத்தகை' எடுத்து (தங்கள் படங்களுக்கு), அதன் மூலம் உலகளவில் வியாபாரம் பண்ணலாம் என்ற வியாபார தந்திரம் தான்..

இதன் ஒரு பகுதியாக, ரஹ்மானுக்கு சஹாரா சிட்டியில் மிகப் பெரிய அரண்மனை வடிவிலான வீட்டை பரிசாகக் கொடுத்து, அங்கேயே மடக்கிப் போடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆஸ்கர் மேடையில் தமிழை ஒலிக்கச் செய்தவர் இந்த 'இழுப்புக்கு' ஒத்துவரமாட்டார் என்றாலும்....அவர் நம் சொத்து. நம் சொந்தம். பசித்து சாப்பிடும் இலையில் முன்பின் அறியாதவன் கைவைத்தால் சும்மா விடுவோமா? உலகம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே "ரஹ்மான் நார்த் இண்டியன் ஹை" எனக் கூற முயற்சிப்போரை என்ன செய்யப் போகிறோம்?





என் கருத்தை ஏற்றுக் கொண்டால் தமிலிஷ் மீது ஒரு ஓட்டு போட்டு விடுங்கள்!

Friday, February 20, 2009

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முகத்தில் கரி!

அனைத்து டிவி சேனல்களும் நேற்று முண்டியடித்துக் கொண்டு ஒளிபரப்பிய உயர்நீதி மன்ற கலவரம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் பலர் அறியாத செய்தி...இந்த மோதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மீதான காவல் துறையினரின் கொலைவெறித் தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன், உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான ஒரு மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நடத்தினார்.
வக்கீல்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துவதால், சென்னை உயர்நீதிமன்றம் உள்பட தமிழகத்தின் முக்கிய நீதிமன்றங்களில் வழக்குகள் அப்படியே தேங்கி நிற்பதாகவும். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து வெறும் 7 நாட்கள் மட்டுமே சென்னை உயர் நீதிமன்றம் இயங்கியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சற்று உஷ்ணமாகி, நீதிமன்றம் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக செயல்படாமல் விடுமுறை அளிக்கப்படுவதை கடுமையாக கண்டித்தார். இனிமேல் எக்காரணம் கொண்டும் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படுவது தடைபடக்கூடாது என ஆதங்கப்பட்ட அவர், நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸார் குவிக்கப்படுவதையும் கண்டித்தார். இவற்றுக்கு விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஆனால் அந்த உத்தரவு உயர் நீதிமன்றத்துக்கு வந்து சேருமுன்னே, அவர் ஆதங்கப்பட்ட அத்தனை விஷ(ம)யங்களும் அறங்கேறியுள்ளன. நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதமேந்திய காவல் துறையினர் குவிப்பு..வக்கீல்கள், நீதிபதிக்கு அடி, உதை! இவற்றுக்கெல்லாம் மேலாக, உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை!!
கலவர இடத்தில் உண்மையில் நடந்தது என்ன? அடுத்த பதிவில்!
படம் நன்றி: தினத்தந்தி



பிடித்திருந்தால் ஒரு ஓட்டைக் குத்திவிட்டுச் செல்லுங்கள்!

Monday, February 2, 2009

ஹலோ மைடியர் ராங் நம்பர்...!!

தலைப்பை பாத்துட்டு ஏதோ, ரொமாண்டிக்கான கதை போல இருக்கும்ணு நெனச்சி அதே மூடுல படிச்சீங்கன்னா.. ஐ அம் சாரி! ஆர்வக் கோளாறால நான் ஆப்பு வாங்குன கதையைத் தான இப்போ பார்க்கப்போறீங்க.

10 வருஷங்களுக்கு முன்னாடி எனக்கே எனக்கான செல்போனை (செங்கல் வகையறா) அதிக விலை கொடுத்து வாங்குன நேரம் அது. கையில் செல்போன் இருந்ததால கண்ணு மண்ணு தெரியாம கடலை போட்டு, முழி பிதுங்கி பில்லு கட்டிக்கிட்டிருந்தேன் (ஒரு கட்டத்துல செல்போன வித்து பில்ல செட்டில பண்ணிருக்கேன்னா பாத்துக்கங்களேன்). ஆனாலும் கெத்து மெயின்டெய்ன் பண்ணணுமே....அதுக்காக மிஸ்டு கால் வந்தாக் கூட உடனே அவுட்கோயிங் கால்களை சகட்டு மேனிக்கு அடிச்சித் தள்ளி திரிஞ்ச காலம் அது.

ஒருநாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வண்டில போகும்போது, போன் ரிங் அடிக்குது. வண்டிய யாருக்கும் பாதகமில்லாம ஓரங்கட்டி (வண்டி கண்டிஷன் அப்பிடி) போன் எடுத்துப் பாக்குறதுக்குள்ள.....கால் கட்டாயிடுச்சி. வித்தியாசமா, நீளமா, புதுசா இருந்த நம்பரப் பாத்து கொஞ்சம் டர்ரியலானேன். ஒரு வேளை வேலைக்கு அப்ளை பண்ணுன கம்பெனியோட ஹெட் ஆபீஸ்ல இருந்து கால் பண்றாய்ங்களா? அய்யயோ அதிர்ஷ்டலட்சுமி ரிங்டோன் வழியா காட்டு கத்து கத்துனதுக்கு அப்புறமும் நாம எடுக்கலயா? இத விடக் கூடாதுன்னு உடனே போன எடுத்து அந்த நம்பருக்கு கால் அடிச்சேன்.

"ஹெல்லோ... ஐ காட் மிஸ்ட் கால் ஃப்ரம் திஸ் நம்பர்... ஆங்...வெல், மே ஐ நோ வூ இஸ் திஸ்..?"
எதிர்முனையில்: "அல்லோஓஓ.. யாரே.. ஒண்ணீயுமே புர்லியே. ஆரு வோணும்? ஒரு பெரிசு பேசியது.
நான் லைட்டா ஜர்க் ஆனேன். "ஆங்... எனக்கு இப்போ இந்த நம்பர்லருந்து கால் வந்தது. இது எந்த ஏரியா...யாரு கால் பண்ணுனது?"
"இது திர்ணாமல (திருவண்ணாமலை) சார்... ரங்கன் தான் இங்க இருந்தான். இர்ங்கோ அவுன கூப்புர்றேன்"
யாரது ரங்கன்? சரி கால் பண்ணியாச்சி... காத்திருந்து பேசித்தான் பாப்போமே...
சரியா 12 நிமிடங்கள் கழித்து, தகர டப்பாவுல ஆணியை வச்சி தேச்ச மாதிரி ஒரு குரல்
"ஆரு நீங்கோ...என்னா வோணும்?"
"நான் சென்னையில் இருந்து பேசறேன்..என்னோட நம்பர் 9840013929. எனக்கு கால் பண்ணீங்களா?
"ஒரு நிமிஷம் இருங்க சார்.."
10 நிமிடங்கள் கழித்து, " சார் தெர்ல சார், யாரோ ஒருத்தரு வந்தாரு.. போன் பண்ணிட்டு கெடைக்ககலைன்னு போய்ட்டாரு..."
"ஹ்ம்ம்.. இது என்ன இடம்?
"இது எஸ்டிடி பூத்து சார்"
"ஓக்கே....நான் வைக்கிறேன்"
"சார் சார்...ஒரு நிமிஷம் இருங்க. போன் பண்ணுன ஆளு வந்துட்டாரு, பேச சொல்றேன்...
"5 நிமிட மவுனம். "ஹேல்லோ"
"ஆங்... ஹல்லொ. நான் சென்னையில் இருந்து பேசுறேன். என்னோட நம்பர் 9840013929. எனக்கு நீங்க கால் பண்ணீங்களா?"
"ஓ.. சாரி சார், நான் தான் பண்ணுனேன். ஆனா நம்பர் தப்பா அழுத்தி உங்களுக்கு போய்டுச்சா... சாரி, ராங் நம்பர்!"

சரியாக 22 நிமிடங்களுக்குப் பின் அந்த காலை துண்டித்த ,பின் செல்போனை ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு வண்டி கண்ணாடியில் முகத்தை பார்த்தேன்....!!!



பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!

புண் + தைலம் = முதல் காதல்!

காதல் ஜெயித்தவனுக்கு பூமாலை...தோத்தவனுக்கு காமாலை...! (ஒரு பொன்மாலைப் பொழுதில், வீட்டுல குப்புற படுத்துகிட்டு நான் யோசிச்ச கவிதை)

முதல் காதல் (அல்லது முதல் ஈர்ப்பு, அல்லது முதல் சைட்) என்பது ஒரு ஃபீலிங்...அதுல ஃபாலிங் ஆனா, கடைசியில ஃபூலிங் (கவித.. கவித...).
அஞ்சப்பர் செட்டிநாடு ஓட்டல்ல புகுந்து 500 ரூபாய்க்கு முழுங்கி, வயித்துல வனவிலங்கு சரணாலயத்த உருவாக்கிட்டு கை கழுவி பில்லுக்காக காத்திருக்கும் போது...பிரிண்டிங் மிஸ்டேக் காரணமா 50 ரூபாய்க்கு பில் வந்தா மனசு எப்படி கும்மியடிக்கும்?! அப்படியொரு குதூகலத்தைத் தான் முதல் காதல் ஏற்படுத்தும்.


நான் அப்போ ஒன்பதாவது படிச்சிட்டிருந்தேன் (சென்னையில). எங்க ஒண்ணு விட்ட பக்கத்து வீட்டுல (ஒரு வீடு தள்ளி) 8வது படிக்கிற அழகான பொண்ணு இருந்தா. அவ பேரு அசின் (அந்தப் பொண்ணோட எதிர்காலம் கருதி பேர மாத்திருக்கேன்). ரெண்டு பேர் வீட்டுக்கும் நடுவுல இருக்குற வீட்டுல தான் நாங்க (நான், அசின், உப்பிலி, அவன் தம்பி லோகேஷ்) ஒண்ணா கூடி விளையாடுவோம். அவ வழக்கமா என் கூட தான் அதிக நேரம் கேரம் போர்டு விளையாடுவா.


ஒவ்வொரு முறை அந்த வீட்டுக்கு அவ வரும்போதெல்லாம் ஆமிர்கான்... அமிர்கான்னு என்னை அழகா கூப்பிடுவா (என்னோட எதிர்காலம் கருதி, என் பேரையும் மாத்திருக்கேன்). நானும், இன்ஸ்பெக்டர் கூப்பிட்டவுடனேயே ஓடுற ஏட்டய்யா மாதிரி பரபரன்னு ஓடி அவ முன்னாடி போய் நிப்பேன். இப்படியே கூத்தும் கும்மாளமுமா எங்களோட நாட்கள் ஓடுச்சி...


ஒரு நாள் வழக்கம் போல அவ என்னை கூப்பிட்டவுடனேயே நான் துள்ளி குதிச்சி ஓடும்போது, தெரியாம எங்க அப்பச்சி கால தட்டி விட்டுட்டேன். உடனே அவங்க "அட ந்தந்தானே...பொண்டாட்டி கூப்புட்டாப்புல இப்பிடி ஓடுறானே...இந்தப் புள்ளய கட்டுனா என்னைய கொலையா கொண்டுபுடுவான் போலருக்கே யாத்தீ" அப்படீன்னு கத்த... எனக்குள்ள ஒரு Na + O2 → Na2O (ரசாயன) மாற்றம்.


அந்த நிமிஷம் முதல், டிவி பெட்டிக்குள்ள பாட்டு ஓடும்போது என்னை ஹீரோவாகவும் அவளை ஹீரோயினாகவும் கற்பனை பண்ணிப் பாப்பேன். அவ வெளிய வந்து நிக்கும்போது, என்ன கலர் டிரஸ் போட்டுருக்கானு ஒளிஞ்சிருந்து கவனிச்சி... குடுகுடுன்னு ஓடிப்போய் அதே கலர் டிரஸ் மாட்டிட்டு அவ முன்னாடி நிப்பேன். எதுக்கு??? "சேம் பிஞ்ச்"னு சொல்லி என் கையை கிள்ளுவா பாருங்க....அதுக்கு!

இப்பிடியே போய்க்கிட்டிருந்தா என்ன அர்த்தம்னு ஒருநாள் என் காதலை(?) சொல்லத் துணிஞ்சிட்டேன். வீராவேசமா கிளம்புன என்னை, சுரேஷ் (பிரெண்டு) தடுத்து நிறுத்தினான். இப்பிடியெல்லாம் வெறுங்கைய வீசிகிட்டு போய் சொன்னா வேலைக்காவாதுண்ணு எனக்கு பயங்கர ஐடியா கொடுத்தான். கேட்டவுடனேயே கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டேன். ஆனா அவன் +2 படிக்கிறதாலும், பல பொண்ணுங்களுக்கு சைக்கிள் டிரைவர் வேலை பாக்குறதாலும் அவன் பேச்சை மதிச்சேன்.


அவன் சொன்ன ஐடியா: 1. என் ரத்தத்தாலே லவ் லெட்டெர் எழுதிக்கிட்டு அவகிட்ட கொடுக்கணும். 2. லெட்டெர் கொடுக்கும்போது, சிவாஜி அளவுக்கு இல்லைண்ணாலும் சரத்பாபு அளவுக்காவது கண்ணீர் விடணும்.
இந்த ஐடியாவை வேத வாக்காக நெனச்சிக்கிட்டு, வீட்டுக்கு போய் லெட்டெர் எழுதத் தயாரானேன்.


பிளேடை எடுத்து, கை மணிக்கட்டைக் கிழிச்சி...அய்யய்யோ, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுண்ணு முடிவு பண்ணினேன். காயமே இது பொய்யடாங்குற பழமொழி நினைவுக்கு வர, உடனே கையிலிருந்த விழுப்புண்ணைப் பார்த்தேன் (போன வாரம் ஓசியில டி.வி.எஸ் சாம்ப் வண்டி வாங்கி ரோட்டுல பிலிம் காட்டுனப்போ, பேலன்ஸ் மிஸ்ஸாகி லைட்டா குப்புற விழுந்ததுல பட்ட அடி). புண் கொஞ்சம் ஆறி, மேல கருப்பு கலர்ல மூடியிருந்தது. அத லைட்டா கீறி விட்டுட்டேன். கொஞ்சம் ரத்தம் வந்தது. சட்டுனு அத கையில ஒத்தி ஒரு பேப்பர்ல "I love you" அப்படீன்னு எழுதி முடிச்சாச்சு..


அடுத்து, கண்ணீர். வீட்டுல அம்மா என்னை குனிய வச்சி குமுறும்போதும், பவானி டீச்சர் என் தலையில டிரம்ஸ் வாகிக்கும்போதும் கூட அழாம நெஞ்சுறுதியோட அப்பிடியே நிப்பான் இந்த ஆமிர்கான். இப்படி எதையும் தாங்கும் இதயத்தோட திரிஞ்சிகிட்டு இருந்த நான்... எப்பிடி ஒரு பொண்ணு முன்னாடி அழுவறது? அப்போதான் எனக்குள்ள இருந்த ஐன்ஸ்டின் + பிரேமானந்தா ஒரு ஐடியா பண்ணாங்க. தைலத்தை கொஞ்சம் அதிகமா தலையில தடவுனாலோ, அத கண்ணுக்கு கிட்ட கொண்டு வந்தாலோ தன்னால கண்ணீர் பெருகும். இந்த ஐடியா சூப்பர்னு எனக்குள்ள சொல்லிக்கிட்டு, உடனே போருக்குத் தயாரானேன்.


வீட்டுல இருந்து அமிர்தாஞ்சன் தைலம் & நம்ம லெட்டர் எடுத்துக்கிட்டேன். அசின் பக்கத்து வீட்டுக்கு வந்து என்னை கூப்பிட்டா, கேரம் விளையாட.
நான் மெதுவா அந்த காம்பவுண்ட் கதவ திறந்து உள்ள போனேன். அங்க, அந்த வீட்டு ஆன்ட்டி இருந்ததால, பேசாம உக்காந்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல அசின் "நீ உம்மணாமூஞ்சி மாதிரி இருக்க... நான் வீட்டுக்கு போறேன் போடா" அப்படீன்னு சொல்லிட்டு கிளம்புனா.. எனக்கு மனசெல்லாம் படபடன்னு இருக்கு... என்ன பண்றதுண்ணு தெரியல.. அவ உண்மையிலேயே கிளம்புறா. உள்ளுக்குள்ள பதறுது.. இவ்ளோ நேரம் இருந்த தைரியம் இப்போ கால் வழியா நழுவி தரையில ஓடிடுச்சி.... அவ வீட்டு வாசலை நெருங்கியதும்.. இதுக்கு மேல தாமதிக்கக் கூடாதுண்ணு உடனே அவ பின்னாடி ஓடிப் போய் "அசின், ஒரு நிமிஷம் இங்கயே இரு. போய்டாத"னு சொல்லிடு, அவசர அவசரமா காம்பவுண்டு கேட் கிட்ட ஓடிப்போய் பரபரப்பா அமிர்தாஞ்சன் டப்பாவைத் திறந்தேன்.


அவ, "எங்கடா போய்ட்ட, போ... நான் போறேன்"னு சொல்லிட்டு அங்கிருந்து நகர.... நான் என்ன பண்றதுன்னு தெரியாம தைலத்தை எடுத்து ரெண்டு கண்ணுலயும் தடவிட்டேன். பாக்கெட்டுலருந்து லெட்டர எடுத்துக்கிட்டு நான் திரும்பவும், அவ என் முன்னாடி வந்து நிக்கவும் சரியா இருந்தது...
அவ கிட்ட பதட்டத்தோட "அசின், உன்ன..இந்த... இத... நீ... நான்...ரத்தத்துல லெட்டர்... என் கண்ணீரைப் பார்...இதயம்...அய்யோ அம்ம்ம்ம்மா கண்ணு....ஆஆஆஆஆஆஆ...கண்ண்ண்ண்ண்ணூஊஊஊஊஊஊஊஉ அச்சினூஊ........."


"எரும மாடு, எனக்குன்னு வந்து பொறந்து தொலச்சிருக்கு....தல வலிச்சா தைலத்த கண்ணுலயா தேய்ப்பாங்க...? இந்த சனியனால 300 ரூபா கண் டாக்டருக்கு அழ வேண்டியதாப் போச்சி...பரீட்சை நேரத்துல கண்ணு வீங்கி எங்க உசிர எடுக்குறான்....இப்போ எக்ஸாம் எழுத முடியுமான்னு தெரியலயே..."



பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!

Sunday, February 1, 2009

தீப்பிடிக்கும் மனசு...ஷாக் அடிக்கும் வயசு!

இது கதையல்ல...நிஜம்!

சம்பவம் நடந்தப்போ ஹாலிவுட் நடிகர் லியார்னாடோ டி-காப்ரியோவுக்கு வயசு 7.. எனக்கும் அப்போ 7 வயசு தான். (நடந்த சம்பவத்துக்கும் அந்த நடிகருக்கும் எந்த தொடர்பும் இல்ல). பசிபிக் பெருங்கடல்ல்ல புயல் சின்னம் உருவாகியிருக்கறதா, லண்டன் பிபிசி ரேடியோவுல செய்தி ஒளிபரப்புன அதே நேரம், எங்க தெருவுல நான் 10 சின்ன பசங்களோட ஐஸ் பாய்ஸ் விளையாடிகிட்டிருந்தேன் (இந்த விளையாட்டுக்கு ஏன் இப்படி பேரு வச்சாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன்).

எங்க தெருவுல எல்லா வீடுகளும் பழைய காலத்து டைப்.. அதனால ஒளிஞ்சிகிறதுக்கு நெறைய இடம் இருக்கும். கோழி பீ (இது ஒரு பையனுக்கு நாங்க வச்ச பேரு. அவன் உண்மையான பேரு மறந்து போச்சி) கண்ண மூடி 100 எண்ணுனான். நாங்க எல்லாரும், ஆளுக்கொரு திசையில போய் ஒளிஞ்சிக்கிட்டோம். எனக்கு ஒளிஞ்சிக்க கிடைச்ச இடம், மனிதனுக்கு சகிப்புத்தன்மையை கத்துக்குடுக்குற இடம்... அதாவது பாழடைஞ்ச கக்கூஸ். அங்க போய் நின்னுக்கிட்டேன்.

எல்லாரையும் அவன் கண்டுபுடிச்சிக்கிடே வந்துக்கிட்டிருக்கான். ஆனா என்னை மட்டும் கண்டுபிடிக்க முடியல. அந்த இடத்துல 5 நிமிஷத்துக்கு மேல் நின்னதால போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி....சுத்தி, முத்தி பார்த்தேன். தடிசா நூல் மாதிரி ஒரு ஒயர் அறுந்து தொங்கிக்கிட்டிருந்துச்சி... நாம தான் தாமஸ் ஆல்வா எடிசனோட கொளுந்தியா பேரனாச்சே... உடனே ஆராய்ச்சி பண்ணலாம்ணு அந்த ஒயரைத் தொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..... ஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வூஊஊஊஊஊஊஊ...ஒரு 10 வினாடிகளுக்கு பாலே டான்ஸ் ஆடி முடிச்சி கீழ விழுந்துட்டேன். உடனே தெரு மொத்தமும் அங்க கூடிடுச்சி..

சில இளவட்ட பசங்க கதவ உடச்சி அரை மயக்கத்துல இருந்த என்னை தூக்குனாங்க. அப்போ, கோழி பீ அங்க ஆஜராகி, என்னை தொட்டுட்டு சொன்னான்.........
"டேய் நீ அவுட்"

பிடிச்சிருந்தா, ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க சாமி!

Friday, January 30, 2009

ஒரிஜினலை விட பைரஸி சாஃப்ட்வேர் நல்லது! ஏன்?

'எதுக்கு சார் பத்தாயிரம் 20 ஆயிரம்னு காச கரியாக்குறீங்க...என்ன வேணும்னு சொல்லுங்க, அதையே 100 ரூபாய்க்கு தர்றோம். ஒரிஜனல விட சூப்பரா இருக்கும். 2 க்கு மேல வாங்குனீங்கன்னா எக்ஸ்ட்ரா ஓண்ணு ஃப்ரீயா தர்றோம்...ரேட் பாத்து பண்ணிக்கலாம் சார்...' இது வெளிநாட்டு பொருட்களின் போலிகளை வாங்க முற்படுவோரிடம் விற்பனையாளர் பேசும் டயலாக் இல்லை... சில ஆயிரங்கள் முதல் பல்லாயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சாஃப்ட்வேர்களின் பைரஸி எனப்படும் போலிகளை விற்பனை செய்யும் விற்பனையாளரின் வியாபாரப் பேச்சு.

வீட்டுக்குள் அல்லது சிறிய அளவில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவோரில், பெரும்பாலானோர் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆபரேடிங் சிஸ்டம்களில் 90 சதவீதம் பைரஸி தான். மிகுந்த சிரத்தையுடன் பல மாதங்கள் ஆய்வுசெய்து வடிவமைக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டம்கள் மற்றும் சாஃப்ட்வேர்களைக் காட்டிலும், அவற்றின் பைரஸிகளுக்கு மவுசு அதிகமாக இருப்பது ஏன்? அசல் மென்பொருள்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றின் போலிகளின் விற்பனை அதிகரிக்கக் காரணம் என்ன? இதை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பார்வையில் அலசாமல், சாதாரண பயனாளர் ஒருவரின் பார்வையிலிருந்து பார்த்தால், பைரஸிகளுக்கான சரியான காரணம் புரிந்து விடும்.


அசல் சாஃப்ட்வேரா? எங்கு விற்கப்படுகிறது... எப்படி வாங்குவது... என்ன விலை...?
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மட்டுமல்ல...ஆடி மாதத்தில் கூட தள்ளுபடி என்ற பெயரில் டி.வி, பிரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமின்றி குண்டூசிகளின் விற்பனையும் களைகட்டும். தங்களது தயாரிப்புகளை இந்தந்த இடங்களில், இந்தந்த விலைகளில் வாங்கலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன நிறுவனங்கள். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, ரேடியோ, கண்காட்சிகள் மற்றும் பெரிய கடைகளில் காட்சிப்பொருளாக்கி தங்கள் தயாரிப்புகளை அவர்கள் விளம்பரப்படுத்துகின்றனர்.

ஆனால் , டி.வி, பெட்டிக்கு சமமாக அனைத்து வீடுகளையும், அலுவலகங்களையும் அலங்கரித்துவரும் கம்ப்யூட்டர்களுக்கு முதுகெலும்பாக செயல்படும் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கிய சாஃப்ட்வேர் தொகுப்புகள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன, அவற்றின் விலை என்னவென்று யாராவது கூற முடியுமா? பைரஸி சாஃப்ட்வேர்கள் வைத்திருப்பது தண்டனைக்குரியது என கூறிக்கொள்ளும் மைக்ரோசாஃப்ட் உள்பட பெரிய நிறுவனங்கள்கூட, தங்கள் தயாரிப்புகளைப் பற்றி பொதுமக்களுக்கு புரியவைத்து (மற்ற எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செய்வது போல), அசல் மென்பொருள்கள் பற்றிய தெளிவை இதுவரை ஏற்படுத்த, ஏனோ தயக்கம் காட்டுகின்றன.

அட்டகாச தள்ளுபடிகள், அதிரடி சலுகைகள் என கவர்ச்சி விளம்பரங்கள் அளிக்கக் கூட வேண்டாம்... 'தயாரிப்புகள் கிடைக்கும் இடம், அவற்றின் பயன்களை' பொதுமக்களுக்கு புரியும்படி பத்திரிகைகளில் (அவுட்லுக், வீக் போன்ற மேல்தட்டு பத்திரிகைகளில் மட்டும் அளித்தால் போதாது) விளம்பரமாக அளிக்கலாம். ஆனால் அதைச் செய்ய நிறுவனங்களால் முடிவதில்லை. அசல் மென்பொருள்களை அலைந்து திரியாமல் எங்கு வாங்குவது, என்னென்ன பயன்கள் என்பதை விளக்க யாரும் இல்லாததால், பயனாளர்கள் பைரஸியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அடுத்து, அதன் விலை.... அசெம்பிள் செய்யப்படும் கம்ப்யூட்டரின் விலைக்கும், நிறுவன தயாரிப்பு கம்ப்யூட்டர்களுக்கும் அதிக விலை வித்தியாசமில்லை. தற்போதுள்ள சூழலில் தரமான கம்ப்யூட்டர்கள் கூட 20ஆயிரத்து சொச்சத்தில் கிடைத்து விடுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று அல்லது இரண்டு அசல் சாஃப்ட்வேர்களை உள்ளிட வேண்டுமென்றால் கூட, கம்ப்யூட்டர்களின் மொத்த விலைக்கு இணையாக பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டமின் விலை சற்று குறைவாக இருந்தாலும், மற்ற சாஃப்ட்வேர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் பக்கம் செல்வதற்கு, சிறிய நிறுவனங்கள் மற்றும் சாதாரண பயனாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.

இதை சாதகமாக்கிக்கொண்டு, அசெம்பிள் கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர்கள் சர்வ சாதாரணமாக பைரஸி சாஃப்ட்வேர்களை நகலெடுத்து சகட்டுமேனிக்கு விற்றுத் தள்ளுகின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், தடுக்க வழிகள் தெரிந்திருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் நிறுவனங்கள் பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கை.

வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒரு சிலர் பைரஸி சாஃப்ட்வேர் வாங்குவதால், தங்கள் தயாரிப்புக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், அசல் மென்பொருள்கள் வாங்குவதில் உறுதியாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிப் பயனாளர்கள் இருக்கும் வரை தங்களுக்கு கவலையில்லை என்றும், நிறுவனங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன.

பைரஸி பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பயனாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் கூட, அசல் மென்பொருள்களின் உரிம சிக்கல்கள் மற்றும் துரிதமற்ற சேவை ஆகியவற்றால் வெறுத்துப் போய் தற்போது இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முழு சுதந்திரம் அளிக்கும் ஓப்பன் சோர்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இனியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விற்பனையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால்... அசல் மென்பொருள்கள் என்பது வெறும் மாஸ்டர் காப்பியாக மாறி, பைரஸி சாஃப்ட்வேர்கள் தான் அசலானவை என்ற நிலை உருவாகிவிடும்!
அசல் மென்போருட்கள்/ஆபரேடிங் சிஸ்டம்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது அனைவருக்கும் தோன்றுகிறதோ, அப்போது தான் பைரஸி மறையும். அதுவரை...பைரஸி நல்லது!!

பிடிச்சிருந்தா, ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க!!

Thursday, January 29, 2009

டாய்லெட்டில் கேமரா!!

டிஸ்கி: இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள், எழுத்துக்கள், எழுத்துப் பிழைகள் யார் மனதையும் புண்படுத்தும் அல்லது சொறிந்து விடும் அல்லது கிள்ளி விடும் நோக்கில் எழுதப்படவில்லை.

ஒரு மல்டி நேஷனல் கம்பெனியின் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்ட ''கம்பெனி கொள்கை & விதிமுறைகள்"

ஆடை விதிகள் (டிரெஸ் கோடு):
பணியாளர்களே... உங்கள் சேவையை நாங்கள் பாராட்டுகிறோம். நீங்கள் ஆபீசுக்கு டெர்பி சட்டை, பேசிக்ஸ் பேண்ட் போட்டு வந்தாலோ, அல்லது 1000 ரூபாய்க்கு அதிகமான மதிப்பில் புடவை/சுடிதார் அணிந்து வந்தாலோ.. உங்களை 'வெயிட் பார்ட்டி' கேடகரியில் சேர்ப்பதோடு, உங்கள் அப்ரைசலில் கை வைப்போம் (நல்ல வசதியா இருக்குற உங்களுக்கு எதுக்கு நெறைய அப்ரைசல்??).இதைப் புரிந்து கொண்டு 'பிதாமகன்' பட கேரக்டர்களை நினைவுபடுத்தும் விதமாக உடையணிந்தால், வி ஆர் சாரி... நமது கம்பெனி மானத்தை வாங்கும் உங்களுக்கு கடும் கண்டனம்! அத்துடன், கம்பெனி கொடுக்கும் சம்பளத்தை உடை வாங்காமல் சேமிக்கும் உங்களிடம் நிறைய பணம் இருக்கும்.. சோ, எதுக்கு அதிக அப்ரைசல்??

ஆண்டு விடுமுறைகள் (ஆன்னுவல் லீவ்ஸ்):
வாழ்த்துக்கள்! உங்களுக்கு ஆண்டுக்கு சம்பளம் பிடித்தம் இல்லாமல் 104 நாட்கள் லீவு தருகிறோம். இந்த லீவுகளை முறையே சனி மற்றும் ஞாயிறுகளில் நீங்கள் எடுக்கலாம்.

உடல்நலக் குறைவு விடுமுறைகள் (சிக் லீவ்):
வயித்து வலி, ஜுரம், கால் வலின்னு யாராவது லீவு கேட்டா... பிச்சுபுடுவோம்!!.. டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்.. டாக்டர் கிட்ட போற அளவுக்கு உடம்புல தெம்பு இருந்தா, கண்டிப்பா ஆபீசுக்கு வர்றதுக்கும் தெம்பு இருக்கும்.

கழிவறை விதிகள் (இதற்கு ட்ரான்ஸ்லேஷன் தேவையிருக்காது):
டியர் எம்ப்ளாயிஸ், இதுதான் மிக முக்கிய அறிவிப்பு!(ஏண்டா எம்ப்ளாயிகளா! வெளியில அம்பி மாதிரி பதுங்கியிருந்துட்டு, எல்லாரும் வாஷ்ரூமுக்குள்ள போயி கம்பெனிய கலாய்ச்சி கூடி கும்மியடிக்கிறீங்களா?! வக்கிறோம் பாரு ஆப்ப்ப்பு)இனிமேல் எல்லோரும் டாய்லெட்டுக்குள்ள 3 நிமிஷத்துக்கு மேல இருக்கக் கூடாது. 3 நிமிஷத்துக்கு மேல உங்க 'கடமைய' செஞ்சிகிட்டு இருந்தீங்கன்னா, ஒரு அலாரம் அடிக்கும்..அடுத்து டாய்லெட்டுல தண்ணி நின்னுடும். அதுக்கு அப்புறமும் உள்ள இருந்தா, அடுத்த நொடி டாய்லெட் கதவு தன்னால திறக்கும். உடனே கதவுக்கு மேல இருக்குற கேமரா, உங்கள படம் புடிக்கும்.இதே தப்பை அடுத்த முறையும் நீங்க செஞ்சீக்கன்னா.... முன்பு எடுத்த போட்டோ, நோட்டீஸ் போர்டுல ஒட்டப்படும். கல்யாண போட்டோவுக்கு போஸ் குடுக்குற மாதிரி அந்த போட்டோவுல இளிச்சிகிட்டு நின்னுகிட்டிருந்தா, கம்பெனியோட மெண்டல் பாலிசி படி உங்கமேல நடவடிக்கை எடுக்கப்படும்.

மதிய உணவு இடைவேளை (லஞ்ச் பிரேக்):
பணியாளர்கள் நலனில் கம்பெனி அக்கறை கொண்டுள்ளது. அதனால்:ஒல்லியாக இருப்பவர்களுக்கு மதியத்தில் 30 நிமிடங்கள் சாப்பிட டைம் கொடுக்கப்படும் (அப்போ தான் அவங்க நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்த முடியும், நிறைய நேரம் வேலை செய்ய முடியும்).மீடியமாக இருப்பவர்களுக்கு 15 நிமிடங்கள் மட்டும் தான். (அப்போ தான் நெறைய சாப்பிட்டு வெயிட் போட மாட்டாங்க.. வேலையும் நல்லா நடக்கும்)குண்டாக இருப்பவர்கள்....நோ லஞ்ச்.. மரியாதையா தண்ணிய குடிச்சிட்டு வேலைய பாருங்கடா.

பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!

பஸ் கண்டக்டர்களுக்கு ஈவு, இரக்கம் இல்லையா?

என்னைக் கேட்டால் பேருந்துகளும், பள்ளிக்கூடங்களும் ஒன்றுதான் என்பேன். பள்ளிக்கூட வகுப்பறைகளில் பிள்ளைகளை அடக்குவது ஆசிரியர்..அவரைப் பிடிக்கவில்லை என்றாலும், உட்கார் என்றால் மாணவர்கள் உட்கார வேஎண்டும், நில் என்றால் நிற்க வேண்டும். பேருந்திலும் இதே கதை தான்...

"அய்யே அறிவில்ல, உள்ள ஏறுய்யா...ஏம்மா உள்ள நகந்து போனா குறைஞ்சி போய்டுவியா..படியில தொங்குற நாயே, அப்பிடியே விழுந்து செத்து போடா...இன்னாயா இது 100 ரூவா தர்ற, நா என்னா பேங்கா..." இது போல பயணிகளை மிரட்டிக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் வேலையைப் பார்க்கும் கண்டக்டர்கள் யாராவது சிரித்து நீங்கள் பார்த்ததுண்டா?முதியோர்களானாலும் சரி...வழியில் கை காட்டினால் விசில் அடித்து நிறுத்த மாட்டார் கண்டக்டர்.. இதே போல, அவசரமாக இறங்க வேண்டும் என பயணிகள் கெஞ்சினாலும் நோ ரெஸ்பான்ஸ். ஏன்?


ஏன் கண்டக்டர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்?பயணிகளை ஆடு, மாடுகள் போல நடத்தும் கண்டக்டர்களுக்கு ஈவு, இரக்கமே கிடையாதா?இத்தனை கேள்விகளையும் சுமந்து சென்று, தெரிந்த கண்டக்டரிடம் (27D பேருந்தில் வேலை பார்க்கிறார்) கொட்டினேன். இவற்றுக்கு அவரளித்த பதில்கள், அவர் பாணியிலேயே...


"நல்லா கேட்ட போ..தமிழ் நாட்டுலயே குறைவா சம்பளம் வாங்குற கவுர்மெண்ட் ஸ்டாப் யாரு தெர்மா? நாங்க தான். அதுலயும் பாதி பேரு டெம்பபரி தான். பெரும்பாலும் எல்லா பஸ்லயும் ஆபிஸ் போறவங்க ரெகுலரா வருவாங்க. அவங்க கூட ஜாலியா பேசினாலோ, ஃப்ரெண்ட்லியா இருந்தாலோ, டிக்கெட் காசு நாளைக்கு தரேம்பாங்க.. இல்லன்னா அவங்களுக்கு தோதான இடத்துல வண்டிய நிறுத்த சொல்லுவாங்க...மத்த பாசஞ்ருங்க சும்மாவா இருப்பாங்க..சண்டைக்கு வர மாட்டாங்க?

எங்களுக்கும் புள்ள குட்டிங்க, அண்ணன் தம்பிங்க இருக்காங்கபா...எல்லாரும் படியில தொங்கும் போது எங்களுக்கு திக்கு திக்குனு இருக்கும்..ஆனா, மேல ஏறுங்கப்பா கண்ணுகளானு அன்பா அடக்கமா சொன்னா, எங்க தல மேல ஏறிடுவனுங்க.. அதட்டலா மேல ஏறச்சொன்னாலே எங்கள அசிங்க அசிங்கமா திட்டிட்டு கண்ணாடிகள உடைக்கிறானுங்க.,.. இதுல சாஃப்டா கேட்டா என்னாகும்..நீயே சொல்லுபா.எப்பவுமே அன்பா சொன்னா பாதிப்பேர் கேக்குறதில்ல..அதனால தான் போலீஸ்காரன் கூட அதட்டிகிட்டே இருக்கான்.
கொஞ்ச நேரம் பஸ்ஸுல வர்றவங்க உக்கார சீட் கிடைக்காம போனா சண்டை போட்டுகறாங்களே, ஏன்? கால் வலிக்கும், அடுத்தவன் வியர்வை நாத்தம் தாங்க முடியாது, மூச்சு திணறும். ஆனா நாங்க பஸ்ஸு ஸ்டார்ட் பண்ண நிமிஷத்துலருந்து, கடைசி ஸ்டாப்பிங் வரைக்கும், நசுங்கிக்கிட்டே அங்கயும் இங்கயும் நடக்கணும்.. அதே நேரம் எல்லாரையும் டிக்கெட் எடுக்க வைக்கணும்... பையில இருக்குற பணத்தை பாதுகாக்கணும்...டிக்கெட்ட ஒழுங்கா கொடுக்கணும், ஸ்டேஜ் கணக்கு எழுதணும்...பணத்தை எண்ணணும்...

இதெல்லாத்தையும் விட, அஞ்சு விரல்லயும் பணத்தை செருகி வச்சிக்கிட்டு, உள்ளங்கை முழுக்க டிக்கெட் கட்டுகளை பிடிச்சிகணும்...கையில ரத்த ஓட்டம் கம்மியாகி, நைட்டுல வலிக்கும்யா..இதெல்லாத்தையும் விட பெரிய அவஸ்தை...இயற்கை உபாதைகள்.. மத்த வேலை பாக்குறவங்களுக்கு 'அவசரம்'னா எப்படியாவது போய்க்குவாங்க.. ஆனா நாங்க பஸ்ஸ பாதி வழியில நிறுத்திட்டு இறங்கி போய்ட்டு வர முடியுமா? சொல்லுங்கய்யா..."என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை.. ஆயினும் வாதத்தை தொடர்ந்தேன். அவை அடுத்த பதிவில்.
பஸ், கண்டக்டர், டிக்கெட்

சென்னை 'வெற்றுலா' பொருட்காட்சி!

ஐந்து நாள் லீவு விட்டதில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் போதுமான அளவுக்கு மேய்ந்து விட்டேன்.. இருந்தாலும் கடைசி நாளான ஞாயிறன்று ஒரு எட்டு போய்விட்டு வந்திடலாமே என மனது தயாராகும் வேளையில், சென்னை தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலா பொருட்காட்சிக்கு வரவேண்டும் என குடும்பத்தினரின் அன்பு மிரட்டலுக்கு கட்டுப்பட்டு (இல்லையென்றால் இரவு சோறு கிடையாது) சில வாண்டுகளுடன் கிளம்பினேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச்சிறந்த தவறான முடிவுகளில் இதுவும் ஒன்று என்பதை அங்கே உணர்ந்தேன்.


கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு (சென்னையில வண்டித் தொகை பெருகிப் போச்சோ..இதுக்கு தனியா ஒரு பதிவ போட்ற வேண்டியது தான்...) உள்ளே நுழைந்தோம். சென்னையின் மக்கள் தொகையில் பாதியை ஒரே இடத்தில் கண்டு விட்ட எரிச்சலுடன், மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து நகர்ந்தோம். ஷங்கர் இப்போது பாய்ஸ் படத்தை எடுத்துக்கொண்டிருந்தால், 'எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணுமடா' பாட்டை ரங்கநாதன் தெருவில் படம் பிடிக்காமல், சுற்றுலா பொருட்காட்சியில் எடுத்து, இளசுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கலாம்.


எடுத்ததும் "13ம் நம்பர் பேய் வீடு" அரங்கம்... வாண்டுகளின் அட்டகாசம் தாளாமல் வேறு வழியின்றி (பல ஆங்கிலப் படங்களின் திகில் + கோரப் படங்களை ஒட்டியிருந்ததால், சற்று பீதியுடன்) தலைக்கு 20 ரூபாய் கொடுத்து உள்ளே சென்றோம். இருபுறமும் கறுப்புத் துணியை போர்த்தி மேலே 0 வாட்ஸ் பல்புகளை எரியவிட்டு, பேய்கள் வாந்தியெடுக்கும் சத்தத்தை டேப் ரெக்கார்டரில் போட்டு விட்டிருந்தார்கள்.. முகத்தில் பேய் முகமூடியணிந்த சிறுவன் திடீரென குறுக்கே பாய்ந்து பயமுறுத்தினான்(?). அருகிலிருந்த வாண்டுகள் அலற, அந்த சிறுவனோ, "ண்ணா... 5 ரூவா குடுணா, டீ குடிக்கிறேன்" என கெஞ்சலாக கேட்டு என்னை உண்மையிலேயே பயமுறுத்தினான்.


தலைவலியுடன் வெளியே வந்தால், அடுத்தடுத்த 4 அரங்குகளில் "திகில் ராணியின் பயங்கரக் கோட்டை" "நடுக்காட்டில் அகோர மனிதனின் பயங்கரங்கள்" "பாதாள உலகில் திகில் மம்மியின் அட்காசங்கள்" என டப்பிங் பட தலைப்புகளை வைத்து அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தனர். இதில் அட்டகாசங்கள் என்பதற்கு, "அட்காசங்கள்" என தப்பும் தவறுமாக அச்சிட்டு, வாண்டுகளின் கேலிக்கு ஆளானார்கள். இதைக் கூட சகிக்கலாம். அரசு அரங்கங்களில் ஒட்டப்பட்ட அறிவிப்புகளில் கூட எழுத்துப் பிழைகள் (படங்கள் பார்க்கவும்). ஏன்? எப்படி...?


வாண்டுகளை பிடித்தபடி நடக்கும் போது கண்ணில் பட்ட "பழங்கால அதிசயங்கள்..அரிய நாணயங்கள், கலைப் பொருட்கள்" என்ற அரங்கத்திற்கு வலுக்கட்டாயமாக அவர்களை இழுத்துச் சென்றேன். இந்த அரங்கு பற்றிய சிறந்த கருத்துரை வழங்குவோர்க்கு பரிசுகள் வழங்குவதாக அறிவிப்பு ஒட்டியிருந்ததால் உற்சாகமாக உள்ளே நுழைந்த எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அதிர்ச்சி... பழங்கால ஆயுதங்கள், கம்பிகள், கற்கள், என பல பொருட்களை அடுக்கியிருந்தனர். ஆனால், ஒவ்வொன்றும் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது, அதன் வரலாறு என்ன என்பதை ஒரு வரி கூட எழுதி வைக்கவில்லை. சில பொருட்கள் மீது மட்டும், ஊறுகாய் ஜாடி, பருப்பு ஜாடி, உப்பு ஜாடி என ஒட்டியிருந்தனர். கூட வந்த பொடிசுகள் கேட்ட "இது என்ன?" கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், கருத்துரை புத்தகத்தையும் பரிசையும் தேடிக்கொண்டிருந்த வேளையில், "புக்குல பேஜி ஆய் போய்டுச்சி சார்.(புத்தகத்தில் பக்கம் தீர்ந்து விட்டது).. நாளிக்கு வாங்க" என்றார் அரங்கு நிர்வாகி.


விரக்தியிலும் கால் வலியிலும் கூட்டத்தில் ஊர்ந்து செல்லும் போது "ஸ்ரீ அமர்நாத் யாத்ரா பனிலிங்க தரிசனம்" என்ற மிகப் பிரம்மாண்ட செட்டப்பைக் கண்டபோது சிரிப்பதா, வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை. ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் இருக்கும் பனிலிங்கமே செயற்கை தான். இதில் ஊருக்கு ஊர் பனி லிங்க தரிசனம் என சூப்பராக கல்லா கட்டுகிறார்கள். 30 ரூபாய் டிக்கெட் என்றாலும் பக்த கூமுட்டைகள் (வேற என்னத்த சொல்றது) சாரை சாரையாக கன்னத்தில் போட்டுக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும் கோலாகலக் காட்சியை நின்று காண முடியாமல் கூட்டம் என்னை நகர்த்திக் கொண்டு சென்றது.


இதன் பிறகு, மாநில அரசின் அனைத்து துறைகளுக்குமான அரங்குகள். ஒவ்வொரு அரங்கிலும்.....ஸ்ஸ்ஸ்... வேணாம் விடுங்க!!

வேலை தேடுவோர் ஜாக்கிரதை!

கடனை வாங்கி, அல்லல் பட்டு, வாயைக் கட்டி வயித்தைக் கட்டி பிள்ளைகளை படிக்கவைக்கும் பெற்றோரின் ஒரே கனவு...பிள்ளை நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பளம் வாங்குவான்(ள்) என்பது தான். இப்படி பிள்ளைகளின் படிப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களின் நோக்கமறிந்து, அவர்களின் ரத்தத்தை டொனேஷன் என்ற பெயரில் மொத்தமாக உறிஞ்சி எடுத்துவிடுகின்றன பள்ளி/கல்லுரிகள்... இதையெல்லாம் தாண்டி படித்து முடிக்கும் இளையர்களிடம் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நூதன முறையில் கொள்ளையடித்து, அப்பாவி பெற்றோரின் களைத்துப்போன மிச்ச சொச்ச ரத்தத்தையும் உறிஞ்ச புறப்பட்டுள்ளன, சில வேலைவாய்ப்பு கன்சல்டன்சி நிறுவனங்கள்.

கன்சல்டன்சி என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் செய்யும் மோசடிகளில் சில...வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளையர்களை வலைபோட்டு பிடிக்க சில கன்சல்டன்சி நிறுவனங்கள் கடைபிடிக்கும் முக்கியமான வழி... முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் கவர்ச்சி விளம்பரங்கள் அளிப்பது தான். தங்கள் நிறுவனத்திலேயே வேலை காலியாக இருப்பது போன்ற தோரணையில் அவர்கள் அளிக்கும் விளம்பரங்களை நம்பிச் செல்பவர்களிடம், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்கள் கொண்ட பட்டியலைக் காட்டி, ‘இவங்களெல்லாம் நம்ம கிளையன்ட்ஸ்.. உங்களுக்கு கண்டிப்பா வேலை இருக்கு. சோ..டெப்பாஸிட் கட்டிட்டு வேலைல சேந்துக்கலாம்’ என ஒப்புக்கு நடத்தப்படும் நேர்காணலின்போது மூளைச் சலவை செய்வர். எப்படியும் வேலைகிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல 100 ரூபாய் முதல் சில ஆயிரங்களை பெற்றோரிடமிருந்து அல்லது கடனாக வாங்கிக் கொடுத்துவிட்டு காத்திருக்க வேண்டும்.

சில நாட்கள்...பல நாட்கள்... சில மாதம் என அந்த நிறுவனங்கள் காலம் கடத்துவர். அதன் பின் அந்த இளைஞருக்கு நிச்சயம் வேறு எங்காவது வேலை கிடைத்திருக்கும். அல்லது வெறுத்துப் போய் வேறு ஊருக்குப்போய் (பெரும்பாலும் பெங்களூர்) வேலை தேடுவார்... இதே போல பணம் செலுத்திய ஏராளமானோர் கடுப்பாகி வேறு முயற்சிகளில் கவனம் செலுத்தத் துவங்கி விடுவதால், பணம் வசூல் செய்த கன்சல்டன்சிகளுக்கு ‘கொள்ளை’ லாபம். பொத்தாம்பொதுவாக அனைத்து கன்சல்டன்சிகளையும் ‘தில்லாலங்கடிகள்’ என கூற முடியாது.

சிறிய அளவில் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் சென்டர்களை வைத்து போணி ஆகாமல் ஈ ஓட்டிக் கொண்டிருப்போர் இந்தப் பட்டியலில் உள்ளனர். இளைஞர்களின் வேலை வாய்ப்பு தாகத்துக்கு தண்ணீர் தருகிறேன் என அழைத்து திகட்டத் திகட்ட அல்வா கொடுத்துவரும் அந்த கன்சல்டன்சி நிறுவனங்கள், தங்களிடம் வேலை கேட்டு வருபவர்களிடம் ‘உங்களுக்கு இன்னும் திறமை பத்தல...கொஞ்சம் பயிற்சி கொடுத்து டெஸ்ட் வச்சி தேத்திடலாம்...அப்புறம் எம்.என்சி.,ல வேலை நிச்சயம்’ எனக் கூறி, பெரிய பட்டியலை நீட்டுவர்.

வேலைவாய்ப்புக்கான பதிவுக் கட்டணம், பயிற்சிக் கட்டணம் என பணத்தை அழுதுவிட்டு நிற்போர், எந்தெந்த நிறுவனங்களில் எங்களுக்கு வேலைவாங்கித் தரப்போகிறீர்கள் என கன்சல்டன்சியிடம் கேட்டுவிட்டால், அவ்வளவு தான்....‘இந்த பங்களா கட்ட ஏது இவ்ளோ காசு’ என்று ஒரு வார்டு கவுன்சிலரிடம் கேட்டால் அவரது கொந்தளிப்பு எப்படியிருக்கும்?! அதையே கொஞ்சம் நாகரீகமாக கன்சல்டன்சிகாரர்களிடம் காணலாம். ரூபாயை கட்டிவிட்டு, அவர்கள் முன் நின்று பவ்யமாக குட்மார்னிங் வைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இவர்களிடம் பணம் கொடுத்து வெறுத்துப்போய் வேறு வேலை தேடுவோர் எண்ணிக்கை ஏராளம்.. இதுபோலவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் பெருகிவரும் கன்சல்டன்சிகளை தடுத்து நிறுத்த முடியாது...நம் பணம் அவர்கள் பர்ஸுக்குள் செல்வதை வேண்டுமானால் தடுத்து நிறுத்தலாம்.. திறமை, தகுதி, படிப்பு இருந்தால் இது போல பணம் கொடுத்து பதிவு செய்யும் நிறுவனங்களிடம் சென்று சிக்கிவிடாமல், நேரடியாகவோ அல்லது நேர்மையாக செயல்படும் கன்சல்டன்சி அல்லது வலைமனைகளில் பதிவு செய்தோ வேலைவாய்ப்பு பெற முயற்சிக்கவும்!