Friday, January 30, 2009

ஒரிஜினலை விட பைரஸி சாஃப்ட்வேர் நல்லது! ஏன்?

'எதுக்கு சார் பத்தாயிரம் 20 ஆயிரம்னு காச கரியாக்குறீங்க...என்ன வேணும்னு சொல்லுங்க, அதையே 100 ரூபாய்க்கு தர்றோம். ஒரிஜனல விட சூப்பரா இருக்கும். 2 க்கு மேல வாங்குனீங்கன்னா எக்ஸ்ட்ரா ஓண்ணு ஃப்ரீயா தர்றோம்...ரேட் பாத்து பண்ணிக்கலாம் சார்...' இது வெளிநாட்டு பொருட்களின் போலிகளை வாங்க முற்படுவோரிடம் விற்பனையாளர் பேசும் டயலாக் இல்லை... சில ஆயிரங்கள் முதல் பல்லாயிரம் ரூபாய் வரை விலை கொண்ட சாஃப்ட்வேர்களின் பைரஸி எனப்படும் போலிகளை விற்பனை செய்யும் விற்பனையாளரின் வியாபாரப் பேச்சு.

வீட்டுக்குள் அல்லது சிறிய அளவில் கம்ப்யூட்டரை பயன்படுத்துவோரில், பெரும்பாலானோர் பயன்படுத்தும் சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆபரேடிங் சிஸ்டம்களில் 90 சதவீதம் பைரஸி தான். மிகுந்த சிரத்தையுடன் பல மாதங்கள் ஆய்வுசெய்து வடிவமைக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டம்கள் மற்றும் சாஃப்ட்வேர்களைக் காட்டிலும், அவற்றின் பைரஸிகளுக்கு மவுசு அதிகமாக இருப்பது ஏன்? அசல் மென்பொருள்களைப் புறக்கணித்துவிட்டு, அவற்றின் போலிகளின் விற்பனை அதிகரிக்கக் காரணம் என்ன? இதை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பார்வையில் அலசாமல், சாதாரண பயனாளர் ஒருவரின் பார்வையிலிருந்து பார்த்தால், பைரஸிகளுக்கான சரியான காரணம் புரிந்து விடும்.


அசல் சாஃப்ட்வேரா? எங்கு விற்கப்படுகிறது... எப்படி வாங்குவது... என்ன விலை...?
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மட்டுமல்ல...ஆடி மாதத்தில் கூட தள்ளுபடி என்ற பெயரில் டி.வி, பிரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மட்டுமின்றி குண்டூசிகளின் விற்பனையும் களைகட்டும். தங்களது தயாரிப்புகளை இந்தந்த இடங்களில், இந்தந்த விலைகளில் வாங்கலாம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக, கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன நிறுவனங்கள். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, ரேடியோ, கண்காட்சிகள் மற்றும் பெரிய கடைகளில் காட்சிப்பொருளாக்கி தங்கள் தயாரிப்புகளை அவர்கள் விளம்பரப்படுத்துகின்றனர்.

ஆனால் , டி.வி, பெட்டிக்கு சமமாக அனைத்து வீடுகளையும், அலுவலகங்களையும் அலங்கரித்துவரும் கம்ப்யூட்டர்களுக்கு முதுகெலும்பாக செயல்படும் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கிய சாஃப்ட்வேர் தொகுப்புகள் எங்கு விற்பனை செய்யப்படுகின்றன, அவற்றின் விலை என்னவென்று யாராவது கூற முடியுமா? பைரஸி சாஃப்ட்வேர்கள் வைத்திருப்பது தண்டனைக்குரியது என கூறிக்கொள்ளும் மைக்ரோசாஃப்ட் உள்பட பெரிய நிறுவனங்கள்கூட, தங்கள் தயாரிப்புகளைப் பற்றி பொதுமக்களுக்கு புரியவைத்து (மற்ற எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செய்வது போல), அசல் மென்பொருள்கள் பற்றிய தெளிவை இதுவரை ஏற்படுத்த, ஏனோ தயக்கம் காட்டுகின்றன.

அட்டகாச தள்ளுபடிகள், அதிரடி சலுகைகள் என கவர்ச்சி விளம்பரங்கள் அளிக்கக் கூட வேண்டாம்... 'தயாரிப்புகள் கிடைக்கும் இடம், அவற்றின் பயன்களை' பொதுமக்களுக்கு புரியும்படி பத்திரிகைகளில் (அவுட்லுக், வீக் போன்ற மேல்தட்டு பத்திரிகைகளில் மட்டும் அளித்தால் போதாது) விளம்பரமாக அளிக்கலாம். ஆனால் அதைச் செய்ய நிறுவனங்களால் முடிவதில்லை. அசல் மென்பொருள்களை அலைந்து திரியாமல் எங்கு வாங்குவது, என்னென்ன பயன்கள் என்பதை விளக்க யாரும் இல்லாததால், பயனாளர்கள் பைரஸியின் பக்கம் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அடுத்து, அதன் விலை.... அசெம்பிள் செய்யப்படும் கம்ப்யூட்டரின் விலைக்கும், நிறுவன தயாரிப்பு கம்ப்யூட்டர்களுக்கும் அதிக விலை வித்தியாசமில்லை. தற்போதுள்ள சூழலில் தரமான கம்ப்யூட்டர்கள் கூட 20ஆயிரத்து சொச்சத்தில் கிடைத்து விடுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்று அல்லது இரண்டு அசல் சாஃப்ட்வேர்களை உள்ளிட வேண்டுமென்றால் கூட, கம்ப்யூட்டர்களின் மொத்த விலைக்கு இணையாக பணம் கொடுக்கவேண்டியிருக்கிறது. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டமின் விலை சற்று குறைவாக இருந்தாலும், மற்ற சாஃப்ட்வேர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றின் பக்கம் செல்வதற்கு, சிறிய நிறுவனங்கள் மற்றும் சாதாரண பயனாளர்கள் அச்சம் கொள்கின்றனர்.

இதை சாதகமாக்கிக்கொண்டு, அசெம்பிள் கம்ப்யூட்டர் விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர்கள் சர்வ சாதாரணமாக பைரஸி சாஃப்ட்வேர்களை நகலெடுத்து சகட்டுமேனிக்கு விற்றுத் தள்ளுகின்றனர். இவை அனைத்தையும் அறிந்திருந்தும், தடுக்க வழிகள் தெரிந்திருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் நிறுவனங்கள் பார்த்துக்கொண்டிருப்பது தான் வேடிக்கை.

வீட்டில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒரு சிலர் பைரஸி சாஃப்ட்வேர் வாங்குவதால், தங்கள் தயாரிப்புக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், அசல் மென்பொருள்கள் வாங்குவதில் உறுதியாக இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிப் பயனாளர்கள் இருக்கும் வரை தங்களுக்கு கவலையில்லை என்றும், நிறுவனங்கள் திட்டவட்டமாக நம்புகின்றன.

பைரஸி பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பயனாளர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் கூட, அசல் மென்பொருள்களின் உரிம சிக்கல்கள் மற்றும் துரிதமற்ற சேவை ஆகியவற்றால் வெறுத்துப் போய் தற்போது இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முழு சுதந்திரம் அளிக்கும் ஓப்பன் சோர்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இனியும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான விற்பனையை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால்... அசல் மென்பொருள்கள் என்பது வெறும் மாஸ்டர் காப்பியாக மாறி, பைரஸி சாஃப்ட்வேர்கள் தான் அசலானவை என்ற நிலை உருவாகிவிடும்!
அசல் மென்போருட்கள்/ஆபரேடிங் சிஸ்டம்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது அனைவருக்கும் தோன்றுகிறதோ, அப்போது தான் பைரஸி மறையும். அதுவரை...பைரஸி நல்லது!!

பிடிச்சிருந்தா, ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க!!

Thursday, January 29, 2009

டாய்லெட்டில் கேமரா!!

டிஸ்கி: இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள், எழுத்துக்கள், எழுத்துப் பிழைகள் யார் மனதையும் புண்படுத்தும் அல்லது சொறிந்து விடும் அல்லது கிள்ளி விடும் நோக்கில் எழுதப்படவில்லை.

ஒரு மல்டி நேஷனல் கம்பெனியின் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்ட ''கம்பெனி கொள்கை & விதிமுறைகள்"

ஆடை விதிகள் (டிரெஸ் கோடு):
பணியாளர்களே... உங்கள் சேவையை நாங்கள் பாராட்டுகிறோம். நீங்கள் ஆபீசுக்கு டெர்பி சட்டை, பேசிக்ஸ் பேண்ட் போட்டு வந்தாலோ, அல்லது 1000 ரூபாய்க்கு அதிகமான மதிப்பில் புடவை/சுடிதார் அணிந்து வந்தாலோ.. உங்களை 'வெயிட் பார்ட்டி' கேடகரியில் சேர்ப்பதோடு, உங்கள் அப்ரைசலில் கை வைப்போம் (நல்ல வசதியா இருக்குற உங்களுக்கு எதுக்கு நெறைய அப்ரைசல்??).இதைப் புரிந்து கொண்டு 'பிதாமகன்' பட கேரக்டர்களை நினைவுபடுத்தும் விதமாக உடையணிந்தால், வி ஆர் சாரி... நமது கம்பெனி மானத்தை வாங்கும் உங்களுக்கு கடும் கண்டனம்! அத்துடன், கம்பெனி கொடுக்கும் சம்பளத்தை உடை வாங்காமல் சேமிக்கும் உங்களிடம் நிறைய பணம் இருக்கும்.. சோ, எதுக்கு அதிக அப்ரைசல்??

ஆண்டு விடுமுறைகள் (ஆன்னுவல் லீவ்ஸ்):
வாழ்த்துக்கள்! உங்களுக்கு ஆண்டுக்கு சம்பளம் பிடித்தம் இல்லாமல் 104 நாட்கள் லீவு தருகிறோம். இந்த லீவுகளை முறையே சனி மற்றும் ஞாயிறுகளில் நீங்கள் எடுக்கலாம்.

உடல்நலக் குறைவு விடுமுறைகள் (சிக் லீவ்):
வயித்து வலி, ஜுரம், கால் வலின்னு யாராவது லீவு கேட்டா... பிச்சுபுடுவோம்!!.. டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்.. டாக்டர் கிட்ட போற அளவுக்கு உடம்புல தெம்பு இருந்தா, கண்டிப்பா ஆபீசுக்கு வர்றதுக்கும் தெம்பு இருக்கும்.

கழிவறை விதிகள் (இதற்கு ட்ரான்ஸ்லேஷன் தேவையிருக்காது):
டியர் எம்ப்ளாயிஸ், இதுதான் மிக முக்கிய அறிவிப்பு!(ஏண்டா எம்ப்ளாயிகளா! வெளியில அம்பி மாதிரி பதுங்கியிருந்துட்டு, எல்லாரும் வாஷ்ரூமுக்குள்ள போயி கம்பெனிய கலாய்ச்சி கூடி கும்மியடிக்கிறீங்களா?! வக்கிறோம் பாரு ஆப்ப்ப்பு)இனிமேல் எல்லோரும் டாய்லெட்டுக்குள்ள 3 நிமிஷத்துக்கு மேல இருக்கக் கூடாது. 3 நிமிஷத்துக்கு மேல உங்க 'கடமைய' செஞ்சிகிட்டு இருந்தீங்கன்னா, ஒரு அலாரம் அடிக்கும்..அடுத்து டாய்லெட்டுல தண்ணி நின்னுடும். அதுக்கு அப்புறமும் உள்ள இருந்தா, அடுத்த நொடி டாய்லெட் கதவு தன்னால திறக்கும். உடனே கதவுக்கு மேல இருக்குற கேமரா, உங்கள படம் புடிக்கும்.இதே தப்பை அடுத்த முறையும் நீங்க செஞ்சீக்கன்னா.... முன்பு எடுத்த போட்டோ, நோட்டீஸ் போர்டுல ஒட்டப்படும். கல்யாண போட்டோவுக்கு போஸ் குடுக்குற மாதிரி அந்த போட்டோவுல இளிச்சிகிட்டு நின்னுகிட்டிருந்தா, கம்பெனியோட மெண்டல் பாலிசி படி உங்கமேல நடவடிக்கை எடுக்கப்படும்.

மதிய உணவு இடைவேளை (லஞ்ச் பிரேக்):
பணியாளர்கள் நலனில் கம்பெனி அக்கறை கொண்டுள்ளது. அதனால்:ஒல்லியாக இருப்பவர்களுக்கு மதியத்தில் 30 நிமிடங்கள் சாப்பிட டைம் கொடுக்கப்படும் (அப்போ தான் அவங்க நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்த முடியும், நிறைய நேரம் வேலை செய்ய முடியும்).மீடியமாக இருப்பவர்களுக்கு 15 நிமிடங்கள் மட்டும் தான். (அப்போ தான் நெறைய சாப்பிட்டு வெயிட் போட மாட்டாங்க.. வேலையும் நல்லா நடக்கும்)குண்டாக இருப்பவர்கள்....நோ லஞ்ச்.. மரியாதையா தண்ணிய குடிச்சிட்டு வேலைய பாருங்கடா.

பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!

பஸ் கண்டக்டர்களுக்கு ஈவு, இரக்கம் இல்லையா?

என்னைக் கேட்டால் பேருந்துகளும், பள்ளிக்கூடங்களும் ஒன்றுதான் என்பேன். பள்ளிக்கூட வகுப்பறைகளில் பிள்ளைகளை அடக்குவது ஆசிரியர்..அவரைப் பிடிக்கவில்லை என்றாலும், உட்கார் என்றால் மாணவர்கள் உட்கார வேஎண்டும், நில் என்றால் நிற்க வேண்டும். பேருந்திலும் இதே கதை தான்...

"அய்யே அறிவில்ல, உள்ள ஏறுய்யா...ஏம்மா உள்ள நகந்து போனா குறைஞ்சி போய்டுவியா..படியில தொங்குற நாயே, அப்பிடியே விழுந்து செத்து போடா...இன்னாயா இது 100 ரூவா தர்ற, நா என்னா பேங்கா..." இது போல பயணிகளை மிரட்டிக் கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் வேலையைப் பார்க்கும் கண்டக்டர்கள் யாராவது சிரித்து நீங்கள் பார்த்ததுண்டா?முதியோர்களானாலும் சரி...வழியில் கை காட்டினால் விசில் அடித்து நிறுத்த மாட்டார் கண்டக்டர்.. இதே போல, அவசரமாக இறங்க வேண்டும் என பயணிகள் கெஞ்சினாலும் நோ ரெஸ்பான்ஸ். ஏன்?


ஏன் கண்டக்டர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்?பயணிகளை ஆடு, மாடுகள் போல நடத்தும் கண்டக்டர்களுக்கு ஈவு, இரக்கமே கிடையாதா?இத்தனை கேள்விகளையும் சுமந்து சென்று, தெரிந்த கண்டக்டரிடம் (27D பேருந்தில் வேலை பார்க்கிறார்) கொட்டினேன். இவற்றுக்கு அவரளித்த பதில்கள், அவர் பாணியிலேயே...


"நல்லா கேட்ட போ..தமிழ் நாட்டுலயே குறைவா சம்பளம் வாங்குற கவுர்மெண்ட் ஸ்டாப் யாரு தெர்மா? நாங்க தான். அதுலயும் பாதி பேரு டெம்பபரி தான். பெரும்பாலும் எல்லா பஸ்லயும் ஆபிஸ் போறவங்க ரெகுலரா வருவாங்க. அவங்க கூட ஜாலியா பேசினாலோ, ஃப்ரெண்ட்லியா இருந்தாலோ, டிக்கெட் காசு நாளைக்கு தரேம்பாங்க.. இல்லன்னா அவங்களுக்கு தோதான இடத்துல வண்டிய நிறுத்த சொல்லுவாங்க...மத்த பாசஞ்ருங்க சும்மாவா இருப்பாங்க..சண்டைக்கு வர மாட்டாங்க?

எங்களுக்கும் புள்ள குட்டிங்க, அண்ணன் தம்பிங்க இருக்காங்கபா...எல்லாரும் படியில தொங்கும் போது எங்களுக்கு திக்கு திக்குனு இருக்கும்..ஆனா, மேல ஏறுங்கப்பா கண்ணுகளானு அன்பா அடக்கமா சொன்னா, எங்க தல மேல ஏறிடுவனுங்க.. அதட்டலா மேல ஏறச்சொன்னாலே எங்கள அசிங்க அசிங்கமா திட்டிட்டு கண்ணாடிகள உடைக்கிறானுங்க.,.. இதுல சாஃப்டா கேட்டா என்னாகும்..நீயே சொல்லுபா.எப்பவுமே அன்பா சொன்னா பாதிப்பேர் கேக்குறதில்ல..அதனால தான் போலீஸ்காரன் கூட அதட்டிகிட்டே இருக்கான்.
கொஞ்ச நேரம் பஸ்ஸுல வர்றவங்க உக்கார சீட் கிடைக்காம போனா சண்டை போட்டுகறாங்களே, ஏன்? கால் வலிக்கும், அடுத்தவன் வியர்வை நாத்தம் தாங்க முடியாது, மூச்சு திணறும். ஆனா நாங்க பஸ்ஸு ஸ்டார்ட் பண்ண நிமிஷத்துலருந்து, கடைசி ஸ்டாப்பிங் வரைக்கும், நசுங்கிக்கிட்டே அங்கயும் இங்கயும் நடக்கணும்.. அதே நேரம் எல்லாரையும் டிக்கெட் எடுக்க வைக்கணும்... பையில இருக்குற பணத்தை பாதுகாக்கணும்...டிக்கெட்ட ஒழுங்கா கொடுக்கணும், ஸ்டேஜ் கணக்கு எழுதணும்...பணத்தை எண்ணணும்...

இதெல்லாத்தையும் விட, அஞ்சு விரல்லயும் பணத்தை செருகி வச்சிக்கிட்டு, உள்ளங்கை முழுக்க டிக்கெட் கட்டுகளை பிடிச்சிகணும்...கையில ரத்த ஓட்டம் கம்மியாகி, நைட்டுல வலிக்கும்யா..இதெல்லாத்தையும் விட பெரிய அவஸ்தை...இயற்கை உபாதைகள்.. மத்த வேலை பாக்குறவங்களுக்கு 'அவசரம்'னா எப்படியாவது போய்க்குவாங்க.. ஆனா நாங்க பஸ்ஸ பாதி வழியில நிறுத்திட்டு இறங்கி போய்ட்டு வர முடியுமா? சொல்லுங்கய்யா..."என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை.. ஆயினும் வாதத்தை தொடர்ந்தேன். அவை அடுத்த பதிவில்.
பஸ், கண்டக்டர், டிக்கெட்

சென்னை 'வெற்றுலா' பொருட்காட்சி!

ஐந்து நாள் லீவு விட்டதில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் போதுமான அளவுக்கு மேய்ந்து விட்டேன்.. இருந்தாலும் கடைசி நாளான ஞாயிறன்று ஒரு எட்டு போய்விட்டு வந்திடலாமே என மனது தயாராகும் வேளையில், சென்னை தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலா பொருட்காட்சிக்கு வரவேண்டும் என குடும்பத்தினரின் அன்பு மிரட்டலுக்கு கட்டுப்பட்டு (இல்லையென்றால் இரவு சோறு கிடையாது) சில வாண்டுகளுடன் கிளம்பினேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச்சிறந்த தவறான முடிவுகளில் இதுவும் ஒன்று என்பதை அங்கே உணர்ந்தேன்.


கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு (சென்னையில வண்டித் தொகை பெருகிப் போச்சோ..இதுக்கு தனியா ஒரு பதிவ போட்ற வேண்டியது தான்...) உள்ளே நுழைந்தோம். சென்னையின் மக்கள் தொகையில் பாதியை ஒரே இடத்தில் கண்டு விட்ட எரிச்சலுடன், மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து நகர்ந்தோம். ஷங்கர் இப்போது பாய்ஸ் படத்தை எடுத்துக்கொண்டிருந்தால், 'எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணுமடா' பாட்டை ரங்கநாதன் தெருவில் படம் பிடிக்காமல், சுற்றுலா பொருட்காட்சியில் எடுத்து, இளசுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்கலாம்.


எடுத்ததும் "13ம் நம்பர் பேய் வீடு" அரங்கம்... வாண்டுகளின் அட்டகாசம் தாளாமல் வேறு வழியின்றி (பல ஆங்கிலப் படங்களின் திகில் + கோரப் படங்களை ஒட்டியிருந்ததால், சற்று பீதியுடன்) தலைக்கு 20 ரூபாய் கொடுத்து உள்ளே சென்றோம். இருபுறமும் கறுப்புத் துணியை போர்த்தி மேலே 0 வாட்ஸ் பல்புகளை எரியவிட்டு, பேய்கள் வாந்தியெடுக்கும் சத்தத்தை டேப் ரெக்கார்டரில் போட்டு விட்டிருந்தார்கள்.. முகத்தில் பேய் முகமூடியணிந்த சிறுவன் திடீரென குறுக்கே பாய்ந்து பயமுறுத்தினான்(?). அருகிலிருந்த வாண்டுகள் அலற, அந்த சிறுவனோ, "ண்ணா... 5 ரூவா குடுணா, டீ குடிக்கிறேன்" என கெஞ்சலாக கேட்டு என்னை உண்மையிலேயே பயமுறுத்தினான்.


தலைவலியுடன் வெளியே வந்தால், அடுத்தடுத்த 4 அரங்குகளில் "திகில் ராணியின் பயங்கரக் கோட்டை" "நடுக்காட்டில் அகோர மனிதனின் பயங்கரங்கள்" "பாதாள உலகில் திகில் மம்மியின் அட்காசங்கள்" என டப்பிங் பட தலைப்புகளை வைத்து அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருந்தனர். இதில் அட்டகாசங்கள் என்பதற்கு, "அட்காசங்கள்" என தப்பும் தவறுமாக அச்சிட்டு, வாண்டுகளின் கேலிக்கு ஆளானார்கள். இதைக் கூட சகிக்கலாம். அரசு அரங்கங்களில் ஒட்டப்பட்ட அறிவிப்புகளில் கூட எழுத்துப் பிழைகள் (படங்கள் பார்க்கவும்). ஏன்? எப்படி...?


வாண்டுகளை பிடித்தபடி நடக்கும் போது கண்ணில் பட்ட "பழங்கால அதிசயங்கள்..அரிய நாணயங்கள், கலைப் பொருட்கள்" என்ற அரங்கத்திற்கு வலுக்கட்டாயமாக அவர்களை இழுத்துச் சென்றேன். இந்த அரங்கு பற்றிய சிறந்த கருத்துரை வழங்குவோர்க்கு பரிசுகள் வழங்குவதாக அறிவிப்பு ஒட்டியிருந்ததால் உற்சாகமாக உள்ளே நுழைந்த எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் அதிர்ச்சி... பழங்கால ஆயுதங்கள், கம்பிகள், கற்கள், என பல பொருட்களை அடுக்கியிருந்தனர். ஆனால், ஒவ்வொன்றும் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது, அதன் வரலாறு என்ன என்பதை ஒரு வரி கூட எழுதி வைக்கவில்லை. சில பொருட்கள் மீது மட்டும், ஊறுகாய் ஜாடி, பருப்பு ஜாடி, உப்பு ஜாடி என ஒட்டியிருந்தனர். கூட வந்த பொடிசுகள் கேட்ட "இது என்ன?" கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், கருத்துரை புத்தகத்தையும் பரிசையும் தேடிக்கொண்டிருந்த வேளையில், "புக்குல பேஜி ஆய் போய்டுச்சி சார்.(புத்தகத்தில் பக்கம் தீர்ந்து விட்டது).. நாளிக்கு வாங்க" என்றார் அரங்கு நிர்வாகி.


விரக்தியிலும் கால் வலியிலும் கூட்டத்தில் ஊர்ந்து செல்லும் போது "ஸ்ரீ அமர்நாத் யாத்ரா பனிலிங்க தரிசனம்" என்ற மிகப் பிரம்மாண்ட செட்டப்பைக் கண்டபோது சிரிப்பதா, வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை. ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத்தில் இருக்கும் பனிலிங்கமே செயற்கை தான். இதில் ஊருக்கு ஊர் பனி லிங்க தரிசனம் என சூப்பராக கல்லா கட்டுகிறார்கள். 30 ரூபாய் டிக்கெட் என்றாலும் பக்த கூமுட்டைகள் (வேற என்னத்த சொல்றது) சாரை சாரையாக கன்னத்தில் போட்டுக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும் கோலாகலக் காட்சியை நின்று காண முடியாமல் கூட்டம் என்னை நகர்த்திக் கொண்டு சென்றது.


இதன் பிறகு, மாநில அரசின் அனைத்து துறைகளுக்குமான அரங்குகள். ஒவ்வொரு அரங்கிலும்.....ஸ்ஸ்ஸ்... வேணாம் விடுங்க!!

வேலை தேடுவோர் ஜாக்கிரதை!

கடனை வாங்கி, அல்லல் பட்டு, வாயைக் கட்டி வயித்தைக் கட்டி பிள்ளைகளை படிக்கவைக்கும் பெற்றோரின் ஒரே கனவு...பிள்ளை நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பளம் வாங்குவான்(ள்) என்பது தான். இப்படி பிள்ளைகளின் படிப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களின் நோக்கமறிந்து, அவர்களின் ரத்தத்தை டொனேஷன் என்ற பெயரில் மொத்தமாக உறிஞ்சி எடுத்துவிடுகின்றன பள்ளி/கல்லுரிகள்... இதையெல்லாம் தாண்டி படித்து முடிக்கும் இளையர்களிடம் வேலை வாய்ப்பு என்ற பெயரில் நூதன முறையில் கொள்ளையடித்து, அப்பாவி பெற்றோரின் களைத்துப்போன மிச்ச சொச்ச ரத்தத்தையும் உறிஞ்ச புறப்பட்டுள்ளன, சில வேலைவாய்ப்பு கன்சல்டன்சி நிறுவனங்கள்.

கன்சல்டன்சி என்ற பெயரில் அந்த நிறுவனங்கள் செய்யும் மோசடிகளில் சில...வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளையர்களை வலைபோட்டு பிடிக்க சில கன்சல்டன்சி நிறுவனங்கள் கடைபிடிக்கும் முக்கியமான வழி... முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் கவர்ச்சி விளம்பரங்கள் அளிப்பது தான். தங்கள் நிறுவனத்திலேயே வேலை காலியாக இருப்பது போன்ற தோரணையில் அவர்கள் அளிக்கும் விளம்பரங்களை நம்பிச் செல்பவர்களிடம், புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்கள் கொண்ட பட்டியலைக் காட்டி, ‘இவங்களெல்லாம் நம்ம கிளையன்ட்ஸ்.. உங்களுக்கு கண்டிப்பா வேலை இருக்கு. சோ..டெப்பாஸிட் கட்டிட்டு வேலைல சேந்துக்கலாம்’ என ஒப்புக்கு நடத்தப்படும் நேர்காணலின்போது மூளைச் சலவை செய்வர். எப்படியும் வேலைகிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல 100 ரூபாய் முதல் சில ஆயிரங்களை பெற்றோரிடமிருந்து அல்லது கடனாக வாங்கிக் கொடுத்துவிட்டு காத்திருக்க வேண்டும்.

சில நாட்கள்...பல நாட்கள்... சில மாதம் என அந்த நிறுவனங்கள் காலம் கடத்துவர். அதன் பின் அந்த இளைஞருக்கு நிச்சயம் வேறு எங்காவது வேலை கிடைத்திருக்கும். அல்லது வெறுத்துப் போய் வேறு ஊருக்குப்போய் (பெரும்பாலும் பெங்களூர்) வேலை தேடுவார்... இதே போல பணம் செலுத்திய ஏராளமானோர் கடுப்பாகி வேறு முயற்சிகளில் கவனம் செலுத்தத் துவங்கி விடுவதால், பணம் வசூல் செய்த கன்சல்டன்சிகளுக்கு ‘கொள்ளை’ லாபம். பொத்தாம்பொதுவாக அனைத்து கன்சல்டன்சிகளையும் ‘தில்லாலங்கடிகள்’ என கூற முடியாது.

சிறிய அளவில் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் சென்டர்களை வைத்து போணி ஆகாமல் ஈ ஓட்டிக் கொண்டிருப்போர் இந்தப் பட்டியலில் உள்ளனர். இளைஞர்களின் வேலை வாய்ப்பு தாகத்துக்கு தண்ணீர் தருகிறேன் என அழைத்து திகட்டத் திகட்ட அல்வா கொடுத்துவரும் அந்த கன்சல்டன்சி நிறுவனங்கள், தங்களிடம் வேலை கேட்டு வருபவர்களிடம் ‘உங்களுக்கு இன்னும் திறமை பத்தல...கொஞ்சம் பயிற்சி கொடுத்து டெஸ்ட் வச்சி தேத்திடலாம்...அப்புறம் எம்.என்சி.,ல வேலை நிச்சயம்’ எனக் கூறி, பெரிய பட்டியலை நீட்டுவர்.

வேலைவாய்ப்புக்கான பதிவுக் கட்டணம், பயிற்சிக் கட்டணம் என பணத்தை அழுதுவிட்டு நிற்போர், எந்தெந்த நிறுவனங்களில் எங்களுக்கு வேலைவாங்கித் தரப்போகிறீர்கள் என கன்சல்டன்சியிடம் கேட்டுவிட்டால், அவ்வளவு தான்....‘இந்த பங்களா கட்ட ஏது இவ்ளோ காசு’ என்று ஒரு வார்டு கவுன்சிலரிடம் கேட்டால் அவரது கொந்தளிப்பு எப்படியிருக்கும்?! அதையே கொஞ்சம் நாகரீகமாக கன்சல்டன்சிகாரர்களிடம் காணலாம். ரூபாயை கட்டிவிட்டு, அவர்கள் முன் நின்று பவ்யமாக குட்மார்னிங் வைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

இவர்களிடம் பணம் கொடுத்து வெறுத்துப்போய் வேறு வேலை தேடுவோர் எண்ணிக்கை ஏராளம்.. இதுபோலவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் பெருகிவரும் கன்சல்டன்சிகளை தடுத்து நிறுத்த முடியாது...நம் பணம் அவர்கள் பர்ஸுக்குள் செல்வதை வேண்டுமானால் தடுத்து நிறுத்தலாம்.. திறமை, தகுதி, படிப்பு இருந்தால் இது போல பணம் கொடுத்து பதிவு செய்யும் நிறுவனங்களிடம் சென்று சிக்கிவிடாமல், நேரடியாகவோ அல்லது நேர்மையாக செயல்படும் கன்சல்டன்சி அல்லது வலைமனைகளில் பதிவு செய்தோ வேலைவாய்ப்பு பெற முயற்சிக்கவும்!