Saturday, November 14, 2009

கடத்தல்!

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திபள்ளி செக்போஸ்ட். இரு மாநிலங்களையும் பாரபட்சமின்றி ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது மழை. மாரத்தான் ரேஸ் ஆடும் மழைக்கு இதமாக டீ குடித்துக் கொண்டிருந்தார் இமானுல்லா. 10 ஆண்டுகளாக இந்த செக்போஸ்ட்டில் தான் வேலை. வரும், போகும் வண்டிகளில் கடத்தல் பொருட்கள் இருப்பதை டிரைவர்களின் கண்களை வைத்தே கண்டுபிடிக்கும் நேர்மையான கில்லாடி போலீஸ்காரர். தீவிரவாத நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததால், இமானுல்லாவுக்கு அன்று டபுள் டியூட்டி.

உக்காந்த எடத்துலயே உலகம் பூரா ஹைடெக் பொருளாதார தீவிரவாத்தை அழகா பண்றான் அமெரிக்காகாரன். அந்த மாதிரி எதாவது பண்ணி தொலையக்கூடாதா இந்த தீவிரவாதிங்க.. இப்படி அவனுங்களும் ஓடி ஒளிஞ்சி, நம்மளையும் நிம்மதியா விடமாட்றானுங்க" புலம்பலை முனகலாக்கிக் கொண்டிருந்தார் இமானுல்லா.

தூரத்தில் மிக வேகமாக ஒரு பைக். லெதர் கோட், ஹெல்மெட் போட்டு முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு வருகிறான் ஒருவன். அவனை மடக்கினார். "சொல்லுங்க சார், எதுக்கு நிறுத்துனீங்க?"

"ம்ம்..உனக்கு மாலை போட்டு மரியாதை பண்ணத்தான். இறங்குய்யா வண்டிய விட்டு. சைடுல என்னய்யா அது?"

"மணல் பை சார். பாக்ஸிங் பிராக்டிஸ் பண்ண கொண்டு போறேன்"

"மணல் பை மாதிரி தெரியலயே.. அத பிரிச்சி கொட்டு"

"இல்ல சார்..அது வந்து..."

"இப்ப நீ பிரிக்கல...உன்ன நான் பிரிச்சிருவேன்"

பை முழுவதும் வெறும் மணல், வெறொன்றுமில்லை. ஆனால் அந்தப் பையில் ஏதோ ஒன்று கடத்தப்படுவதாக அவரது போலீஸ் மூளை சைரன் அடித்தது. ஆனாலும் அவருக்குத் தெரிந்த நுட்பங்களைக் கொண்டு சோதித்தார். முடியவில்லை. அரை மனதாக அவனை அனுப்பினார்.
ஒரு வாரம் கழிந்தது. அதே ஆள். ஆனால் இம்முறை பைக்கில் நான்கு பைகளைக் கட்டியிருந்தான். நான்கும் பெரிய, வித்தியாசமான வடிவத்தில் அழகாக இருந்தன.

"நிறுத்து, நிறுத்து.. போன வாரம் வந்தவன் தானே நீ...இந்த முறை என்ன கொண்டு போற? எல்லாத்தையும் பிரி"

இம்முறை மிகுந்த தயக்கத்துடன் பிரித்தான். பெரிய பைகள் முழுவதும் மிகச் சிறிய கூழாங்கற்கள், அதனுடன் சிறிய தர்மாக்கோல் பந்துகள். அவற்றை அக்குவேறு ஆணி வேறாக சோதித்து விட்டார் இமானுல்லா. கூட இருந்த இரண்டு போலீஸ்காரர்களும் சோதனையில் களைத்து விட்டனர்.

வெற்றிக் களிப்புடன் அத்தனை மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். ஆனாலும் அந்த மூட்டையில் என்னமோ இருப்பதாக இமானுல்லாவின் உள்மனது அலறியது.
"சே.. இத்தனை வருஷம் போலீஸா இருந்ததுக்கே வெக்கப்படுறேன். அவன் அந்தப் மூட்டைக்குள்ள என்னமோ கடத்துறான். ஆனா கண்டுபுடிக்க முடியல. விஞ்ஞானம் கடத்தலுக்கு நல்லாவே உதவுது" என வெளிப்படையாக புலம்பினார்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 8 முறை அவன் அந்த செக்போஸ்ட்டை அழகாக கடந்தான், பைக்கில் வித விதமான மணல், தெர்மாகோல், மரத்தூள் மூட்டைகளுடன். இமானுல்லாவும் சளைக்காமல் அவனை சோதனை செய்தார். ஒன்றும் நடக்கவில்லை.

மிகப் பெரிய ஏமாற்றத்துடன் பணி ஓய்வு பெற்றார் இமானுல்லா. எல்லைப் புற கிராமத்தில் உள்ள வீட்டில் பொழுதைக் கழித்த அவர், ஒருநாள் நெடுஞ்சாலையில் உள்ள கணேசன் டீ கடையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

"ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா...!" கணீரென ஒலித்த குரலைக் கேட்டு பேப்பரிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்த்தார் இமானுல்லா.

அதே முகம்...அதே குரல்...அவனே தான்!

"யோவ்... என்னய்யா இந்த பக்கம். எங்க கடத்தல் மூட்டைகளைக் காணோம்"

"வணக்கம் சார். ரிட்டயர்டு ஆயிட்டீங்களா...பரவால்ல, என்ன ஞாபகம் வச்சிருக்கீங்க!

இப்பல்லாம் யாரும் உங்கள மாதிரி நேர்மையா சோதனை பண்றதில்லை சார். காசு வாங்கிட்டு விட்டுர்றாங்க"

"எனக்கே தண்ணி காட்டுன கில்லாடிய்யா நீ, மறக்க முடியுமா...சரி, இப்போ எனக்கு ஒரு உண்மையைச் சொல்லு...மணல் மூட்டைங்கற பேர்ல தமிழ்நாட்டுல இருந்து கர்நாடகாவுக்கு என்னத்த கடத்துன? சத்தியமா நா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!"

"வேணாம் விடுங்க சார்!"

"நான் ரிட்டயர்டு ஆயிட்டேன். உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ கடத்துறன்னு நிச்சயமா தெரியும். ப்ளீஸ், இத்தனை வருஷமா என்ன கடத்துன?"

"திருட்டு பைக்!"


எனக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வந்த ஆங்கிலத்தில் ஜோக். கதையாக்கி இருக்கிறேன்.
பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லையென்றாலும் பின்னூட்டமிடுங்கள்!!

Sunday, November 8, 2009

மற்றொரு மூலையில்...அடச்சே!!


போன மாதம் கண்புரைக்கு சிகிச்சை செய்ததால், வெளிச்சத்தைத் தவிர்க்க கறுப்புக் கண்ணாடியுடன் அந்த பூங்காவுக்குச் சென்றார் நடேசன். தினமும் இதே நேரம் வாக்கிங் போனாலும், யாருடனும் இதுவரை பேசியதில்லை.சில நாட்களாக தன் வயதை ஒத்த மூன்று பேரிடம் ஹலோ மட்டும் சொல்வதுண்டு. அவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். நால்வருக்கும் பொதுவான நண்பன் ஹலோ மட்டுமே...

"இன்னைக்காவது அவங்ககிட்ட பேசிடணும்..." என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றார். பூங்காவின் மற்றொரு மூலையில் அந்த மூன்று பேரும் கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். மெதுவாக அவர்களை நோக்கிச் சென்றார்.

பூங்காவின் மற்றொரு மூலையில்...
"இத்தனை நாளா நாம வெறுமனே ஹலோ மட்டும் தான் சொல்லிக்கிட்டிருந்தோம். இன்னைக்குத் தான் பேசறோம். ரொம்ப சந்தோஷம். என் பேரு சுந்தரராஜன். ரிட்டயர்டு கவர்மெண்ட் ஸ்டாப். என் மகன் சாதாரண கார் சேல்ஸ்மெனா இருந்தான். இன்னைக்கு உழைச்சு முன்னேறி பெரிய கார் ஷோரூம் வச்சிருக்கான். தன்னோட பிரெண்டுக்கு ஒரு சான்ட்ரோ கார் பிரசன்ட் பண்ணிருக்கான். நட்புக்கு இலக்கணம் அவன்" என்றார் ஒருவர்.

"என் பெயர் அருளப்பன். என் பையனும் சும்மா இல்ல. கார்பென்டரா இருந்தான். படிப்படியா முன்னேறி இன்னைக்கு பெரியளவுல ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றான். தன்னோட பிரெண்டுக்கு தாம்பரத்துல பிளாட் பிரசன்ட் பண்ணி அசத்திட்டான். என் மகன் தான் நல்ல நட்புக்கு உதாரணம்..." இது இரண்டாமவர்.

"நான் மனோகரன். என் பையன் ஷேர் மார்க்கெட் புலி. சமீபத்துல தன்னோட நண்பனுக்காக லாபத்துல இருக்குற கம்பெனியோட 1 லட்ச ரூபா ஷேர்ஸ் சும்மாவே கொடுத்துருக்கான். நட்புக்காக எதையும் செய்வான் என் மகன்" என்றார் மூன்றாமவர்.

இவர் பேசி முடிக்க, நடேசன் அங்கு வந்து சேர்ந்தார்.

"வாங்க சார். நீங்க கொஞ்சம் லேட். நாங்க மூணு பேரும் அறிமுகமாயிட்டோம். உங்களையும் உங்க குடும்பத்தைப் பத்தியும் சொல்லி அறிமுகப்படுத்திக்கோங்க! அப்புறம் நாங்க எங்கள பத்தி சொல்றோம்"

"வணங்கம்க...என் பேரு நடேசன். எனக்கு பொய் பேச வராது. நான் ரிட்டயர்டு ஸ்கூல் டீச்சர். எனக்கு ஒரே ஒரு மகன். உருப்படியா எந்த வேலையிலும் நிலைக்கறதில்லை. சமீபத்துல தான் அவன் ஒரு ஹோமோன்னு கண்டுபுடிச்சேன். அவனுக்கு 'பாய் பிரெண்ட்ஸ்' அதிகம். அதுல ஒரு கார் கம்பெனிகாரன் சாண்ட்ரோ கார் கொடுத்துருக்கான், ரியல் எஸ்டேட்காரன் தாம்பரத்துல பிளாட் கொடுத்துருக்கான், ஷேர் பிசினஸ் பண்ற ஒருத்தன் 1 லட்ச ரூபா ஷேர்ஸ் அன்பளிப்பா கொடுத்துருக்கான். என்ன கருமத்துக்குத்தான் இவனுங்கள்லாம் இப்படி அலையறானுங்கன்னு தெரியல...சரி உங்களையும், உங்க பசங்கள பத்தியும் சொல்லுங்க!

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...இதெல்லாம் ஒரு கதைன்னு எங்க நேரத்தை கெடுத்தியேன்னு நினைக்கிறவங்க கருத்துரைல திட்டலாம்!

Tuesday, October 27, 2009

காதல்


இரண்டு அழகான பட்டாம்பூச்சிகள் காதலித்தன. ஒருநாள் பூந்தோட்டத்தை வட்டமிட்டு மகிழ்ந்த போது...எப்போதும் பெண் பட்டாம்பூச்சியை சீண்டிப் பார்த்து விளையாடும் ஆண் பட்டாம்பூச்சி, " நமக்குள்ள ஒரு சின்ன விளையாட்டு. இதுல யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போமா?" என்றது.

"உனக்கு எப்பவுமே விளையாட்டு தான். சரி, என்ன விளையாட்டு?"

"நாளை அதிகாலையில் இந்த மொட்டு பூவாக மலர்ந்த உடனே, பூவுக்கு நடுவுல உட்காரணும். யார் முதல்ல இடம் பிடிக்கிறாங்களோ, அவங்களோட காதல் தான் உயர்ந்ததுன்னு அர்த்தம்! என்ன சொல்ற?"

"போட்டியில நான் தான் ஜெயிப்பேன். என்னோட காதல் தான் உயர்ந்தது!"

"ஆண்களோட காதல் தான் உயர்ந்தது. நாளைக்கு நீ அதை பார்க்கப் போற"

அடுத்த நாள் காலை, அந்தப் பூ மலர்வதற்கு முன்பே, ஆண் பட்டாம்பூச்சி அங்கு சென்று விட்டது. பூ மலரும் நேரத்தில் உடனே சென்று உட்காருவதற்குத் தயாராக சிறகுகளை விரித்து காத்திருந்தது. பூ மலரத் தொடங்கும் போது, "இன்னும் அவளைக் காணோமே...சே, இவ்வளவு தானா அவளோட காதல்?" என்ற எரிச்சலோடு பூவை நெருங்கியது.
மொட்டு மெல்ல விரிந்தது. உள்ளே... பெண் பட்டாம்பூச்சி. நள்ளிரவே மொட்டுக்குள் தன்னை வருத்தி புகுந்ததால் கிழிந்த சிறகுகளுடன், இறந்து திறந்த அதன் கண்களில் வலியையும் மீறி காதலையும், காதலனையும் வென்று விட்ட பரவசத்தின் மிச்சம்!!



கதை பிடித்திருந்தால், தமிழிஷ் பட்டையில் ஒரு ஓட்டைப் போடுங்கள்!!

Thursday, September 24, 2009

தோசைக்குள் மனசு!

ஹோட்டலுக்குள் நுழைந்ததும், ஓரமாக ஒரு டேபிளைத் தேடும் கூச்ச சுபாவம் நம் எல்லோரிடமும் உண்டு.. அது அஜயனுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் தான், காலியாக இருந்த பல டேபிள்களை கண்களாலேயே ஓரந்தள்ளி, ஓரத்தில் இருந்த டேபிளை மையம் கொண்டு அதில் அமர்ந்தான்...

"என்ன சார் வேணும்?"
அடுத்த ஷிஃப்டுக்கு வர வேண்டிய ஆள் லீவு போட்டதால் உருவான எரிச்சல், எச்சிலில் நீந்தி வார்த்தைகளாய் வெளியேறியது சப்ளையர் சரவணனுக்கு.

"பன்னீர் மசாலா தோசை எவ்ளோ?"

"35 ரூவா சார்!"

பாக்கெட்டைத் துழாவி, பணத்தை எண்ணினான் அஜயன். பணச் சுருக்கத்தை உணர்த்தியது அவனது புருவச் சுருக்கம்.
"பன்னீர் மசாலா வேணாம். மசாலா தோசை எவ்ளோ?"

'சரியான பரதேசி போலருக்கு. காச எண்ணி வச்சிகிட்டு சாப்புட வர்றான். இவனா டிப்ஸ் தரபோறான்...' என கம்ப்யூட்டரை விட வேகமாக மனதுக்குள் திட்டித் தீர்த்த சரவணன், கடுப்புடன், "30 ரூவா சார்!"

மீண்டும் பாக்கெட்டுக்குள் விரலால் கோலம் போட்ட அஜயன், நிம்மதிப் புன்னகையுடன், "சரி, கொண்டு வாங்க!" என்றான்.

10 நிமிடங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட தோசை, அடுத்த 5 நிமிடங்களில் அஜயனின் செரிமான மண்டலத்துக்குள் அவசரமாக பயணித்தது.

30 ரூபாய் பில்லை வைத்து விட்டு சரவணன் நகர, பாக்கெட்டிலிருந்து பணத்தை வைத்து விட்டு அஜயனும் வேகமாக நகர்ந்தான்.

அஜயனின் வேகத்தைப் பார்த்த சரவணன் "கிழிஞ்ச நோட்டு வச்சிருப்பானா...காசு கம்மியா வச்சிபுட்டு ஓடிட்டானா..." என மீண்டும் தன் கம்ப்யூட்டர் மனதுக்கு வேலை கொடுத்துக் கொண்டே, பில் பணத்தை எடுத்தான். அதில்....

35 ரூபாய் பணம் சரவணனை ஏளனம் செய்து கொண்டிருந்தது!

Thursday, September 17, 2009

தென்கச்சி சுவாமிநாதனின் மறுபக்கம்!

"தெளிப்பானை பூட்டிக் கொளனுடன் இணைத்து, பதம் பார்த்து பூச்சிக் கொல்லி திரவத்தை தெளிக்கவும்"
1988ம் ஆண்டுக்கு முன் வானொலியில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உதவிக்குறிப்பு இது.
"அண்ணாச்சி...அரை லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்த டப்பாவுல ஊத்தி, தெளிப்பானோட இணைச்சிட்டீங்கன்னா, ரொம்ப ஈஸியா தெளிச்சிடலாம். பூச்சி, புழு அண்டாது..." தென்கச்சி சுவாமிநாதன் என்ற பணியாளர் எளிமைப்படுத்தி அளித்த உதவிக் குறிப்பு இது.

பலத்த எதிர்ப்புக்கிடையே, போராடி வழக்குத் தமிழை வானொலிக்குள் புகுத்தி வெற்றி கண்டவர் இன்று நம்மிடையே இல்லை. அவரது இன்று ஒரு தகவலைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் அவர் இல்லத்துக்குச் சென்று நீண்ட நேரம் அளவளாவினேன். மன உளைச்சலில் இருப்பதாகக் கூறினார். இதுவரை ஊடகங்களின் பார்வைக்கு வராத அவரது அனுபவங்களை சிரிக்காமல் சொல்லி என்னை குலுங்கிச் சிரிக்க வைத்தார். அவர் கூற நான் குறித்துக் கொண்ட அவரது அனுபவங்கள், அவரைப் பற்றிய அரிய குறிப்புகள் இங்கே.. இது அவருக்கு அஞ்சலிப் பதிவு!!

பிடிக்காமல், வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி,"இன்று ஒரு தகவல்". வேறு வழியில்லாமல் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார் தென்கச்சியார். சிலர் சற்று பிரபலமானவுடனே புதுப் பேனா வாங்கி வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் போட ஆள் தேடுவார்கள். ஆனால் தென்கச்சியார் நேரெதிர். பிரபலத்தின் சாயல் சிறிதும் இல்லை அவரிடம்.

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டவற்றில் சில துளிகள்:

"நான் அரசு ஊழியன். இந்த நிகழ்ச்சியை செய்வது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதைத்தான் செய்தென். அதே வேலையை இப்போ டிவியில செய்றேன். அவ்வளவு தான். என்னோட வேலையைச் செய்றதுக்கு என்னை ஏன் புகழ வேண்டும்?"

"நான் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிகள்ல கொடுத்த நகைச்சுவைகளில் 75% திரைப்படங்கள்ல பயன்படுத்திக்கிட்டாங்க. பல இயக்குநர்கள் அனுமதி கேட்டாங்க. பலர் கேட்காமல் பயன்படுத்திக்கிட்டாங்க. குட்டிக் கதையெல்லாம் சொல்ற வரைக்கும் தான் அது என் படைப்பு. சொல்லி முடிச்சிட்டேன்னா, அது என்னோடதில்ல...கேக்கிறவங்களுக்கு சொந்தம்"

ஓய்வு பெறும் வரையிலும், அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. வெளிநாடு வாழ் தமிழர்களின் தொடர் அழைப்புகளை தட்ட முடியாமல், வேறு வழியின்றி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகள் சென்றுள்ளார்.

செய்தியாளராக இருந்த போது, பலமுறை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். பதட்டம் மிகுந்த பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களை பேட்டி எடுத்து, அவர்களது உள்ளக் குமுறல்களை தமிழகத்தில் ஒலிக்கச் செய்திருக்கிறார்.

எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர். மடிப்பாக்கத்தில் அவரது வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் 'தெருவலம்' சென்ற போது, வீட்டை விட்டு வெளியே வந்து 15 நிமிடங்கள் எனக்காகக் காத்திருந்தார். கிளம்பும் போது, "என்னை மார்க்கெட்ல இறக்கி விட்ருங்க தம்பி" என வாஞ்சையோடு கேட்டு வண்டியில் ஏறிக் கொண்டார்.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம்... TVS மொபெட்.

வீட்டின் மாடியில் அறை கட்டி வைத்துள்ளார். வெளியூரிலிருந்து அவரைப் பார்க்க வரும் நேயர்கள், ரசிகர்களை அங்கு தங்க வைத்து உபசரிப்பார்.

ஒரு முறை திருக்குறள் முனுசாமி அவர்கள், சுவாமிநாதனை அழைத்து "எங்கிருந்து தகவல்களை எடுக்குறீங்க? உங்க தகவல்களை என்னோட புத்தகங்களில் பயன்படுத்திக்கலாமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு தென்கச்சியார் "நான் சொல்ற நெறய தகவல்களை உங்க புத்தகத்துல இருந்து தான் எடுக்கறேன்" என்றார்.

இன்ஸ்டன்ட் காபி போல, ஒரு விஷயத்தைச் சொன்னால் சில நிமிடங்களில் அதை கருவாக வைத்து குட்டிக் கதை + ஒரு ஜோக் என கலந்து கட்டி கலக்குவார். 'மது' என்று நான் ஒரு வார்த்தையைச் சொல்லி, உடனே ஒரு 'இன்று ஒரு தகவல்' தயாரிக்க முடியுமா? என்றேன். "அப்பிடியா தம்பி.. ஒரு 5 நிமிஷம் வேற ஏதாவது பேசலாமா..." என்றவர், வேறு ஒரு விஷயத்தைப் பற்றி பேசினார். திடீரென நிறுத்தியவர், "நீங்க சொன்ன வார்த்தைக்கான குட்டிக் கதை தயார். சொல்லட்டுமா?" என்றார்.

தனது ஸ்டைலில் இன்று ஒரு தகவல் சொல்லத் துவங்கினார்.(அவர் ஸ்டைலில் படித்துப் பாருங்கள்).
ஒரு நாள் சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல ரெண்டு பேர் மூக்கு முட்ட குடிச்சுட்டு விழுந்து கிடந்தாங்க. கன்னியாகுமரி போற ரயில் வந்து நின்னுட்டுது. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் மட்டும் கொஞ்சம் கம்மியா குடிச்சிருப்பான் போல. அவன் மட்டும் தட்டுத் தடுமாறி ரயிலேறிட்டான். ரயிலும் புறப்பட்டு போய்ட்டுது.

ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி, ஸ்டேஷன்ல விழுந்து கிடந்தவன் மெல்ல எழுந்து பாத்தான். திடீர்னு அய்யோ, அம்மான்னு கதறி அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுகையை கேட்டு அங்க வந்த ஸ்டேஷன் மாஸ்டர், "ஏம்பா, அழுவுற"ன்னு கேட்டார். அதுக்கு அவன் "சார், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் போய்டுச்சா?" ன்னு கேட்டான். அதுக்கு அவர், "போய்டுச்சேப்பா...நீ குடிச்சதுனால நிதானம் தவறி ரயில தவற விட்டுட்டே..பணமும் விரயம், நேரமும் விரயம். இதோட நாளைக்கு தான் அடுத்த ரயில். உன் கூட வந்தவன் குறைவா குடிச்சதால, தடுமாறி ரயிலேறிட்டான். குடிக்காம இருந்தா, ரெண்டு பேரும் போய்ருக்கலாம்ல. இனிமேலாவது திருந்து" அப்படீன்னார்.

"என்னது, என் கூட இருந்தவன் ரயிலேறி கன்னியாகுமரி போய்ட்டானா?" ன்னு கேட்டுட்டு மறுபடியும் அய்யோ, அம்மான்னு கதறி அழ ஆரம்பிச்சுட்டான். ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரொம்ப சங்கடமாயிட்டுது. "சரி விடுப்பா. இதுக்கு ஏன் அழற"ன்னு ஆறுதல் சொன்னார்.

அதுக்கு அவன் "அவன் என்னை வழியனுப்ப வந்தவன் சார். நான் தான் ஊருக்கு போகணும். அவன் கிட்ட பைசா கூட எதுவும் இல்ல"ன்னான்!

சிரிக்காமல் இதை சொல்லி முடித்தார் தென்கச்சியார்!

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன், இன்று சிரித்த முகமாக மறைந்து அனைவரது முகங்களையும் இறுக வைத்து விட்டார்.

Sunday, July 26, 2009

ஆந்தைக்காக அலையும் சேட்டுகள்..சுடுகாடாய் மாறும் வண்டலூர்


மூட நம்பிக்கை = ஒருவர்/ஒரு குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, சில உயிர்கள் தங்கள் நிம்மதியை இழத்தல்.

வசதி குறைந்தோரின் மூட நம்பிக்கைகள் எலுமிச்சை, கோழி, அதிகபட்சம் ஆடு என்பதோடு முடிந்து விடுகிறது. வசதி படைத்தோரின் மூட நம்பிக்கைகள், எந்த எல்லைக்கும் செல்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், வட மாநிலத்தவர்கள். குறிப்பாக சேட்டுகள் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினர் (மொத்தமாக வட மாநிலத்தவர்களை நாம் ஏன் சேட்டுகள் என்று அழைக்கிறோம்?)
சமீபகாலமாக மிகப் பெரிய மூட நம்பிக்கை ஒன்று சென்னையில் வசிக்கும் வட மாநிலத்து பணக்காரர்களை வாட்டி எடுக்கிறது.தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் பன்மடங்கு பெருக வேண்டுமெனில், ஆந்தைகளின் உடலில் இருந்து முடியைப் பிடுங்கி (இறக்கையில் இருந்து பிடுங்கக் கூடாது. உடலில் இருந்து மட்டுமே பிடுங்கப்பட வேண்டும்), அதை வைத்து பூஜிக்க வேண்டும். ஏழு தலைமுறைக்கும் குறையாத சொத்துக்கள் கிடைக்க வேண்டுமெனில், ஆண் ஆந்தையின் கழுத்தைத் திருகி பூஜைகள் செய்ய வேண்டும்.
ஆடு, கோழிகள் என்றால் எளிதில் கிடைத்து விடும்.. ஆந்தைகள்? ஏற்கனேவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஆந்தைகளுக்கு எங்கே போவது, வனவிலங்கு காப்பங்களைத் தவிர...! பல மாநிலங்களிலும் வன விலங்கு சரணாலயங்களில் ஆந்தைகள் இந்த பூஜைக்காக ‘மோட்சம்’ அடைகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆந்தைகள் தங்கள் உயிரை இவர்களுக்காக தியாகம் செய்துள்ளன. எப்படி? ‘மேற்படி’ வருவாய்க்கு எந்த உத்திரவாதமும் இல்லாத அரசு ஊழியர்களைக் கொண்ட வண்டலூர் மிருகக் காட்சி சாலையில், ஆந்தைகள் புண்ணியத்தில் நல்ல வருவாய். ஒரு முடியைப் பிடுங்கித் தர 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர்.
இப்படியே ‘பிடுங்கிப் பிடுங்கி’ அங்கிருந்த மிகப் பெரிய அரிய வகை ஆந்தை தொடர்ந்து சாப்பிடாமல் செத்தே போனது. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் ஆந்தைகள் உள்ளன. அவை நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில், இருட்டில் வாழும் உயிரினங்கள் என்ற பெயரில் வெளிச்சம் இல்லாத அறைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆந்தைகளின் அழிவு, வெளிச்சத்துக்கு வராமலேயே இருட்டுக்குள் மறைந்து விட்டது.

டெய்ல்பீஸ்: இந்த உண்மையை என்னிடம் ஒப்புக்கொண்டது, வண்டலூர் உயிரியல் பூங்காவின் பராமரிப்பு பணியாளர். அவர் என்னிடம் பேசியது:ஆந்தைங்கள வந்து சேட்டுங்கோ அடிக்கடி பாப்பாங்க சார்...முடி கேப்பாங்கோ, தர முடியாதுன்னு சொல்லி வெர்ட்டிடுவேன். ஆனா என்னால தொடர்ந்து அத்தையெல்லாம் காப்பாத்த முடில. பாவம் சார் ஆந்த. அத்த போட்டு கொடுமபட்த்தி கட்சில சாகட்சிடானுங்கோ. அது ஒரு வாயில்லா பிராணி சார். சே. இன்னா மன்சனுங்க சார்..அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு கிளம்பும்போது, ‘ சொத்து வச்சிகிறீங்களா சார்.. அது 100 மடங்கு பெர்சா ஆவணுமா சார்... என்கிட்ட கட்சியா ஒரு ஆந்த முடி இர்க்கு சார். சேட்டு பசங்களுக்கு 5 ஆயிரம். நீ நம்மாளு. 2 குடு சார் போதும். இன்னா சார் சொல்ற...?
இன்னாத்த சொல்றது???

Friday, June 5, 2009

அவன்..அவள்...'அது'

சென்னை புரசைவாக்கம். பகலில் இருந்த ஆர்ப்பாட்டங்கள், சலசலப்புகளின் சுவடுகள் ஏதுமின்றி அமைதியாய்..மணி: இரவு 10.30. டென்னிஸ் மேட்ச் பார்வையாளன் போல அங்குமிங்கும் கழுத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் சுதாகர். எந்தப் பக்கம் பார்த்தாலும் திருவல்லிக்கேணிக்கு பஸ் வருவதாகத் தெரியவில்லை. ஊரில் விவசாயம் பொய்த்துப் போனதால் நண்பனின் சிபாரிசோடு சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பெரிய ஜவுளிக் கடையில் விற்பனையாளன் வேலை. ஒரு வாரம் தானாகிறது சென்னை வந்து. அழகழகான பெண்கள், மெரினா பீச், மவுன்ட் ரோடு என கனவுகளோடு வந்திறங்கியவனுக்கு, கடை தான் பகல் நேர உலகம் என விதிக்கப்பட்டு விட்டது.

மணி: 10.45.
"பரதேசிப் பய சரவணன் பஸ்ஸு நெறய இருக்குன்னு சொன்னானே...ஒரு ஈ காக்காயக் கூட காணோமே... அய்யய்யோ, ஒரு வார பேட்டா காசு ஐநூற புடுங்கிட்டு போய்ருவாய்ங்களா?" சுதாகரின் மெல்லிய புலம்பலை சில நொடிகள் கவனித்து விட்டு, தனது வேலையைத் தொடர்ந்தார் அருகிலிருக்கும் டீ கடையின் ஓனர்.
மணி: 11.00.
பஸ் வரும் என்ற நம்பிக்கை சுதாகரின் கால் வழியே வழிந்து ஓடி சாலையில் மறைந்தது. "இன்னைக்கு ரோட்டுல தான் படுக்கணுமா...ட்ரிப்ளிகேணிக்கு நடந்து கூட போக முடியாதே..." சுதாகர் புலம்பிக் கொண்டிருக்கும் போது தான், அவள் அங்கு வந்து சேர்ந்தாள். சுதாகரின் கண்களுக்கு சுமாராகத் தெரிந்த அவள், சாலையையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கத் தொடங்கினாள்.

மணி:11.10
சென்னையில் இரவு நேரங்களில் பெண்கள் வலை விரித்து காசு பிடிங்கி விடுவார்கள் என நண்பர்கள் அடித்த எச்சரிக்கை மணி, சுதாகரின் மண்டைக்குள் "ணங்" என ஓசை எழுப்பிய அதே நேரம், 24 ஆண்டுகள் அவனுக்குள் ஓயாமல் இயங்கி வரும் செரிமாண மண்டலத்துக்குள் திடீரென பட்டாம்பூச்சிகள் கூடி கும்மியடிக்கத் தொடங்கின."ஐநூறு ரூவா இருக்கே.. கொஞ்சம் செலவு செஞ்சாத்தான் என்ன....அதிகமா கேட்டாங்கன்னா? பேசித்தான் பாப்போமே...அடேய், ஊரு பேரு தெரியாத எடத்துல எக்கு தப்பா போய் மாட்டிக்க போறடா...." சுதாகருக்குள் சட்டசபை விவாதம் நடந்து கொண்டிருந்தது. இவர்கள் இருவரையும் கவனித்த நாயர், அந்தப் பெண்ணைப் பார்த்து லேசாக புன்னகையைச் சிந்தி, "பார்ட்டி நம்பகமானவன் தான், இங்க தான் எப்பவும் பஸ் ஏறுவான்" என பார்வையால் கிரீன் சிக்னல் கொடுத்தார்.

மணி:11.15
இதற்கு மேல் பஸ் வராது என உறுதி செய்து கொண்ட சுதாகர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "முதல் தடவையா இருந்தா என்ன....போய் கேட்டுத்தான் பாப்போமே. ரேட் படிஞ்சா போகலாம்" என ஒரு வழியாக முடிவெடுத்துத் திரும்பும் போது....சற்று தள்ளி நின்றிருந்த பெண் இப்போது நெருக்கமாய்!
சுதாகர் திக்கித் திணறிக் கேட்பதற்குள்..."நைட்ல இப்போ தான் மொதோ மொதலா தொழிலுக்கு வந்துருக்கேன். அதான் நல்ல பார்ட்டியான்னு நின்னு பார்த்தேன்.. வீடு எங்கே?" அவளே பேச்சைத் தொடங்கினாள்.
"நா..நான் ட்ரிப்ளிகேணி""ஓ..போலாமா?"
"எவ்..எவ்வளவு? என் கிட்ட கம்மியாத் தான் இருக்கு"
"பரவால்ல வாங்க சார், அதிகமா கேக்க மாட்டேன். பெரிய கஸ்டமர் கிட்ட ரேட் அதிகமா வாங்கிக்குவேன்"
"சரி போலாம்.."
பக்கவாட்டில் மாட்டியிருந்த தனது யூனிபார்ம் சட்டையை மாட்டிக் கொண்டு ஆட்டோவை ஸ்டார்ட் செய்தாள் அவள். சென்னையில் முதல் முறையாக ஆட்டோவில், அதுவும் பெண் ஓட்டும் ஆட்டோவில் பயணிக்கும் பரவசத்துடன் அவன்!
இருவரையும் சுமந்து கொண்டு சீறிப் பாய்ந்தது அது!!


கதை பிடித்திருந்தால் தமிழிஷ், தமிழ்மணத்தில் ஓட்டைக் குத்திவிட்டுச் செல்லுங்கள்