Thursday, September 17, 2009

தென்கச்சி சுவாமிநாதனின் மறுபக்கம்!

"தெளிப்பானை பூட்டிக் கொளனுடன் இணைத்து, பதம் பார்த்து பூச்சிக் கொல்லி திரவத்தை தெளிக்கவும்"
1988ம் ஆண்டுக்கு முன் வானொலியில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட உதவிக்குறிப்பு இது.
"அண்ணாச்சி...அரை லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்த டப்பாவுல ஊத்தி, தெளிப்பானோட இணைச்சிட்டீங்கன்னா, ரொம்ப ஈஸியா தெளிச்சிடலாம். பூச்சி, புழு அண்டாது..." தென்கச்சி சுவாமிநாதன் என்ற பணியாளர் எளிமைப்படுத்தி அளித்த உதவிக் குறிப்பு இது.

பலத்த எதிர்ப்புக்கிடையே, போராடி வழக்குத் தமிழை வானொலிக்குள் புகுத்தி வெற்றி கண்டவர் இன்று நம்மிடையே இல்லை. அவரது இன்று ஒரு தகவலைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன் அவர் இல்லத்துக்குச் சென்று நீண்ட நேரம் அளவளாவினேன். மன உளைச்சலில் இருப்பதாகக் கூறினார். இதுவரை ஊடகங்களின் பார்வைக்கு வராத அவரது அனுபவங்களை சிரிக்காமல் சொல்லி என்னை குலுங்கிச் சிரிக்க வைத்தார். அவர் கூற நான் குறித்துக் கொண்ட அவரது அனுபவங்கள், அவரைப் பற்றிய அரிய குறிப்புகள் இங்கே.. இது அவருக்கு அஞ்சலிப் பதிவு!!

பிடிக்காமல், வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி,"இன்று ஒரு தகவல்". வேறு வழியில்லாமல் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார் தென்கச்சியார். சிலர் சற்று பிரபலமானவுடனே புதுப் பேனா வாங்கி வைத்துக் கொண்டு ஆட்டோகிராப் போட ஆள் தேடுவார்கள். ஆனால் தென்கச்சியார் நேரெதிர். பிரபலத்தின் சாயல் சிறிதும் இல்லை அவரிடம்.

அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டவற்றில் சில துளிகள்:

"நான் அரசு ஊழியன். இந்த நிகழ்ச்சியை செய்வது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதைத்தான் செய்தென். அதே வேலையை இப்போ டிவியில செய்றேன். அவ்வளவு தான். என்னோட வேலையைச் செய்றதுக்கு என்னை ஏன் புகழ வேண்டும்?"

"நான் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சிகள்ல கொடுத்த நகைச்சுவைகளில் 75% திரைப்படங்கள்ல பயன்படுத்திக்கிட்டாங்க. பல இயக்குநர்கள் அனுமதி கேட்டாங்க. பலர் கேட்காமல் பயன்படுத்திக்கிட்டாங்க. குட்டிக் கதையெல்லாம் சொல்ற வரைக்கும் தான் அது என் படைப்பு. சொல்லி முடிச்சிட்டேன்னா, அது என்னோடதில்ல...கேக்கிறவங்களுக்கு சொந்தம்"

ஓய்வு பெறும் வரையிலும், அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. வெளிநாடு வாழ் தமிழர்களின் தொடர் அழைப்புகளை தட்ட முடியாமல், வேறு வழியின்றி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகள் சென்றுள்ளார்.

செய்தியாளராக இருந்த போது, பலமுறை யாழ்ப்பாணம் சென்றுள்ளார். பதட்டம் மிகுந்த பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட தமிழர்களை பேட்டி எடுத்து, அவர்களது உள்ளக் குமுறல்களை தமிழகத்தில் ஒலிக்கச் செய்திருக்கிறார்.

எப்போதும் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர். மடிப்பாக்கத்தில் அவரது வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் 'தெருவலம்' சென்ற போது, வீட்டை விட்டு வெளியே வந்து 15 நிமிடங்கள் எனக்காகக் காத்திருந்தார். கிளம்பும் போது, "என்னை மார்க்கெட்ல இறக்கி விட்ருங்க தம்பி" என வாஞ்சையோடு கேட்டு வண்டியில் ஏறிக் கொண்டார்.

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம்... TVS மொபெட்.

வீட்டின் மாடியில் அறை கட்டி வைத்துள்ளார். வெளியூரிலிருந்து அவரைப் பார்க்க வரும் நேயர்கள், ரசிகர்களை அங்கு தங்க வைத்து உபசரிப்பார்.

ஒரு முறை திருக்குறள் முனுசாமி அவர்கள், சுவாமிநாதனை அழைத்து "எங்கிருந்து தகவல்களை எடுக்குறீங்க? உங்க தகவல்களை என்னோட புத்தகங்களில் பயன்படுத்திக்கலாமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு தென்கச்சியார் "நான் சொல்ற நெறய தகவல்களை உங்க புத்தகத்துல இருந்து தான் எடுக்கறேன்" என்றார்.

இன்ஸ்டன்ட் காபி போல, ஒரு விஷயத்தைச் சொன்னால் சில நிமிடங்களில் அதை கருவாக வைத்து குட்டிக் கதை + ஒரு ஜோக் என கலந்து கட்டி கலக்குவார். 'மது' என்று நான் ஒரு வார்த்தையைச் சொல்லி, உடனே ஒரு 'இன்று ஒரு தகவல்' தயாரிக்க முடியுமா? என்றேன். "அப்பிடியா தம்பி.. ஒரு 5 நிமிஷம் வேற ஏதாவது பேசலாமா..." என்றவர், வேறு ஒரு விஷயத்தைப் பற்றி பேசினார். திடீரென நிறுத்தியவர், "நீங்க சொன்ன வார்த்தைக்கான குட்டிக் கதை தயார். சொல்லட்டுமா?" என்றார்.

தனது ஸ்டைலில் இன்று ஒரு தகவல் சொல்லத் துவங்கினார்.(அவர் ஸ்டைலில் படித்துப் பாருங்கள்).
ஒரு நாள் சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல ரெண்டு பேர் மூக்கு முட்ட குடிச்சுட்டு விழுந்து கிடந்தாங்க. கன்னியாகுமரி போற ரயில் வந்து நின்னுட்டுது. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் மட்டும் கொஞ்சம் கம்மியா குடிச்சிருப்பான் போல. அவன் மட்டும் தட்டுத் தடுமாறி ரயிலேறிட்டான். ரயிலும் புறப்பட்டு போய்ட்டுது.

ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சி, ஸ்டேஷன்ல விழுந்து கிடந்தவன் மெல்ல எழுந்து பாத்தான். திடீர்னு அய்யோ, அம்மான்னு கதறி அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுகையை கேட்டு அங்க வந்த ஸ்டேஷன் மாஸ்டர், "ஏம்பா, அழுவுற"ன்னு கேட்டார். அதுக்கு அவன் "சார், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் போய்டுச்சா?" ன்னு கேட்டான். அதுக்கு அவர், "போய்டுச்சேப்பா...நீ குடிச்சதுனால நிதானம் தவறி ரயில தவற விட்டுட்டே..பணமும் விரயம், நேரமும் விரயம். இதோட நாளைக்கு தான் அடுத்த ரயில். உன் கூட வந்தவன் குறைவா குடிச்சதால, தடுமாறி ரயிலேறிட்டான். குடிக்காம இருந்தா, ரெண்டு பேரும் போய்ருக்கலாம்ல. இனிமேலாவது திருந்து" அப்படீன்னார்.

"என்னது, என் கூட இருந்தவன் ரயிலேறி கன்னியாகுமரி போய்ட்டானா?" ன்னு கேட்டுட்டு மறுபடியும் அய்யோ, அம்மான்னு கதறி அழ ஆரம்பிச்சுட்டான். ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரொம்ப சங்கடமாயிட்டுது. "சரி விடுப்பா. இதுக்கு ஏன் அழற"ன்னு ஆறுதல் சொன்னார்.

அதுக்கு அவன் "அவன் என்னை வழியனுப்ப வந்தவன் சார். நான் தான் ஊருக்கு போகணும். அவன் கிட்ட பைசா கூட எதுவும் இல்ல"ன்னான்!

சிரிக்காமல் இதை சொல்லி முடித்தார் தென்கச்சியார்!

முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன், இன்று சிரித்த முகமாக மறைந்து அனைவரது முகங்களையும் இறுக வைத்து விட்டார்.

31 comments:

Robin said...

//முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன், இன்று சிரித்த முகமாக மறைந்து அனைவரது முகங்களையும் இறுக வைத்து விட்டார். // :(

Robin said...

//முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன், இன்று சிரித்த முகமாக மறைந்து அனைவரது முகங்களையும் இறுக வைத்து விட்டார். // :(

ஆதித்தன் said...

மறைந்த சுவாமிநாதன் அவர்களின் எழுத்துக்கள் எளிமையுடன் பயன் தரக்கூடியது. அவருக்கு என் அஞ்சலிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தகவல்கள் .. பகிர்ந்தமைக்கு நன்றி.

Ramanc said...

1990- 1995 களில் யாழ்பாணத்தில் இருந்த காலம். அப்போதேல்லாம் சையிக்கிள் டைன்மோவை சுற்றி ரேடியோ கேட்கும் காலம். அதில்லை "தென்கச்சி சுவாமிநாதன்" ஐயாவின் இன்று ஒரு தகவலை கேட்காமல் போனால் பள்ளியில் படிப்பு ஏறாது. இதனாலை நான பள்ளிக்கு சற்று காலம் தாழ்த்தித்தான் செல்வேன். அப்புறம் என்ன punishment தான். பாடசலையை கூட்டி துப்பரவாக்கிட்டுத்தான் வகுப்புக்கு போவது. அந்த அள்வுக்கு ஐயாவின் கதைகள் எனக்கும் என் குடும்பத்துக்கும் பிடிக்கும். ஐயா கடைசியில்லை " இப்படித்தான் ந்ம்மாளு ஒருத்தன்" என்று தொடங்கவே எங்கட அம்மா சிரிக்க தொடங்கிடுவா! . இப்ப அந்த சிரிப்புக்கு எங்க போவம்

நான் said...

மிக அருமை...அறிவு அதிகம் அவரிடம்

பிரேம்குமார் அசோகன் said...

வருகைக்கு நன்றி ராபின்

நன்றி ஆதித்தன்!

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி ராமன், சற்றேறக்குறைய உங்களுக்கும் எனக்குமான அனுபவம் ஒன்று தான்.

நன்றி முத்துலட்சுமி!

பிரேம்குமார் அசோகன் said...

வருகைக்கு நன்றி கிறுக்கன்

சதங்கா (Sathanga) said...

தகவல் தந்தவர் பற்றிய தகவல்கள் அருமை. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

Thekkikattan|தெகா said...

:)) அவரோட படத்தை உங்களோட நிக்கிறதில பார்த்தாவே தெரியுது, மனுசன் எவ்ளோ எளிமையானவர்னு. நன்றி பகிர்ந்துகிட்டதுக்கு. நேர்லயும் பார்த்திட்டீங்க... ம்ம் .

அஞ்சலிகளை பதிவு செய்கிறேன்.

மணிபாரதி துறையூர் said...

"முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் தென்கச்சி சுவாமிநாதன், இன்று (16-09-2009) சிரித்த முகமாக மறைந்து அனைவரது முகங்களையும் இறுக வைத்து விட்டார்." நல்ல எழுத்தாளுமை பிரேம்

malar said...

நல்ல அறியும் அடக்கமும் நிறைந்தவர் .தென்கச்சி சுவாமிநாதன்

When it is high time said...

I have written an obituary for him in my English blog

http://www.myownquiver.blogspot.com/

Anonymous said...

ஐயாவின் இன்று ஒரு தகவலை கேட்காமல் போனால் பள்ளியில் படிப்பு ஏறாது------------yaaro ennoda kathaiya kaapi adichittanga.

Anonymous said...

Thenkachiyai arumaiyaga ninaivu koorndhu irukureergal...But adhenna "MARUPAKKAM"? Yella pakkamum avar sirndha yelthalar,Pechalar dhane.. KrishKumar

Anonymous said...

I am confused with the logic behind the title..
KrishKumar

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி மணி!

வருகைக்கு நன்றி சதங்கா!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தெகா.

நன்றி மலர்!

பிரேம்குமார் அசோகன் said...

யார் உங்கள் கதையை காப்பியடித்தார்கள் அனானி?

ஏன் "மறுபக்கம்" என தலைப்பு வைத்துள்ளீர்கள் எனக் கேட்டு (திட்டியிருக்கும்)அனானி நண்பர்களுக்கு....
ஒருவரின் மறுபக்கம் என்பது எப்போதும் கயமை கொண்டதாகத் தான் இருக்கும் என்பது திரைத்துறையினரும், எழுத்தாளர்களும் ஏற்படுத்திய கற்பிதம்.
வெளியுலகுக்கு பார்ப்பதற்கும், பேசுவதற்கும் எளிமையாக காட்சியளிக்கும் பிரபலமானோரின் சொந்த வாழ்வில் ஆடம்பரங்கள் அணிவகுத்திருக்கும். இது அவர்களது மறுபக்கம்.
தென்கச்சியாரின் மறுபக்கம்,அதாவது சொந்த வாழ்க்கையும், அதைச் சார்ந்த அவரது செயல்பாடுகளும் எளிமை தான் என்பதைக் கூறவே அந்தத் தலைப்பு (ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ண கட்டுதே)

துளசி கோபால் said...

நானும் ஒரிருமுறை தொலைக்காட்சியில் அவர் சொல்லும் இன்று ஒரு தகவல் பார்த்திருக்கேன். எப்படி இவர் சிரிக்காம இருந்துக்கிட்டு மற்றவர்களைச் சிரிக்கவைக்கிறார் என்று நினைப்பேன்.

அதன்பிறகு எங்கள் ஊரில் ( நியூஸி) தமிழ்ச் சங்கத்தில்
கலைவிழாக்களில் இவரது புத்தகம் ஒன்றை (நண்பரிடமிருந்து இரவல் வாங்கினது)வச்சு நிறைய ஜோக்ஸ் எல்லாம் சொல்லி இருக்கேன். கடைசியில் இந்த ஜோக்ஸ் எங்கே இருந்து சுட்டதுன்னும் சொல்லிருவேன்.

அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகள்.

Naresh Kumar said...

உங்களது இரங்கலுடன் எனது அஞ்சலியும் சேரட்டும்...

பணம், புகழுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்கள் வெகு சிலரே... அதில் இவரும் ஒருவர் என்றேத் தோன்றுகிறது

அவரைப் பற்றிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றீ!!!

தலைப்பைப் பற்றி எனக்கும் சற்று சங்கடம் இருந்தது.. ஆனால் நீங்கள் சொன்ன விளக்கம் மிகப் பொருத்தம்..

நரேஷ்
www.nareshin.wordpress.com

Deepa said...

அருமை. தென்கச்சியாரைப் பற்றி அறியாத பல அரிய தகவல்களுடன் மிகச் சிறப்பான முறையில் அஞ்சலி செய்திருக்கிறீர்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

//நான் அரசு ஊழியன். இந்த நிகழ்ச்சியை செய்வது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதைத்தான் செய்தென். அதே வேலையை இப்போ டிவியில செய்றேன். அவ்வளவு தான். என்னோட வேலையைச் செய்றதுக்கு என்னை ஏன் புகழ வேண்டும்?"//
இக்காலத்துல் இம்மாதிரியானவர்கள் அருகிக் கொண்டே வருவது மிக்க வேதனையளிக்கிறது.

THANGAMANI said...

தென்கச்சியார் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார்.தங்களின் பதிவுக்கு நன்றி.

Anonymous said...

Ungal vilakkathai pala murai padithu oru valiyai purindhu konden..Kobappadamal vilakiyadharku nanri...Adhu sari ..Adhenna "Thitti irukkum" anony nanbargal...Naan yen kulapthai ye pinnotamaga padhivu seidhen..(Peyarodu)...Neengal kuripitta anony Naan illai dhane?
Maripadiyum kannai kattudha ? :)
Krishkumar.

பிரேம்குமார் அசோகன் said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி துளசி!

புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி நரேஷ்.

அவரது எளிமைக்கு மேலும் பல உதாரணங்கள் உள்ளன தீபா.. பதிவின் நீளம் கருதி அவற்றைக் கூறவில்லை தீபா.

நன்றி தங்கமணி!

பிரேம்குமார் அசோகன் said...

கிரிஷ், நீங்கள் தலைப்பைப் பற்றி கேள்வி எழுப்பியதால் தான், அதைப் பற்றி விளக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இல்லையெனில் அனைவரும் தவறாக புரிந்து கொண்டிருப்பர். கண்டிப்பாக உங்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் தனியாக நன்றி தெரிவித்திருப்பேன்.

Anonymous என்ற பெயரில் சிலர் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பின்னூட்டமிடுகின்றனர், கிரிஷ்..இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல, பல பதிவுகளுக்கும் இவர்கள் இதுபோலத்தான் அநாகரிகமாக பின்னூட்டமிடுகின்றனர். என்னைப் போல பல பதிவர்களுக்கும் இது போலவே பின்னூட்டங்கள் வருவதைத் தெரிந்து கொண்டேன். அதனால், அவற்றை கண்டுகொள்ளவில்லை.

அருண்சங்கர் said...

தென்கச்சியாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

+Ve Anthony Muthu said...

15 வருடம் முன்பு வெறும் ரேடியோ, டேப் ரெக்கார்டர் மட்டுமே துணையாய் வாழ்ந்த காலத்தில், மிக நெருக்கமான மானசீகத் தோழர் தென்கச்சிதான்.

என்றேனும் அவரை நேரில் சந்திப்பேன்.., பேசுவேன் என்று நம்பியிருந்தேன்.

மனம் மிக வெறுமையாய் தோன்றுகிறது.

When it is high time said...

நானும் அந்தக்கேள்வியை = ஏன் இந்த தலைப்பு? - என்பதைக்கேட்டிருந்தேன். என் பெயரோடுதான். அப்படியிருக்க, என் கேள்வி இங்கு போடாமல், பதிலை மட்டும் ‘அனானிகள்’ திட்டி எழுதியிருப்பதாக - போட்டிருந்ததப்ப்ற்றி அதிர்ச்சியடைந்தேன்.

எனினும், தலப்பை justify பண்ணியது கண்டு விட்டாச்சு.

இங்கோ மற்றெங்கோ, யாருக்குமே தெ.சு வேண்டப்படாதவர் அல்ல. அதை நான் என் ஆங்கிலப்பதிவில் சொல்லியிருக்கிறேன். அவருக்கு ஆங்கிலத்தில் obituary எழுதியவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்பது என் hesitant opinion. Imnt sure.

www.myownquiver.blogspot.com

ஊர்சுற்றி said...

சிறந்த பதிவு!

butterfly Surya said...

அருமையான பகிர்விற்கு நன்றி.

Post a Comment